search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நண்பனின் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்தோம்: கைதான 3 பேர் வாக்குமூலம்
    X

    நண்பனின் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் தொழிலாளியை கொலை செய்தோம்: கைதான 3 பேர் வாக்குமூலம்

    மார்த்தாண்டம் அருகே நண்பனின் மனைவிக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததால் கட்டிடத் தொழிலாளியை கொலை செய்தோம் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள தேனாம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி ஜோன்ஸ் (வயது 48). கட்டிடத் தொழிலாளி. மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்தார்.

    கடந்த 17-ந் தேதி ஸ்டான்லி ஜோன்ஸ் குழித்துறை மேற்கு ரெயில் நிலையம் அருகே உள்ள ரப்பர் தோட்டத்தில் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது கழுத்து மற்றும் மார்பு பகுதியில் வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் அவர் அரை நிர்வாண நிலையிலும் காணப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

    ஸ்டான்லி ஜோன்ஸ் கொலையில் அவரது நண்பர்களான குழித்துறை பாளையங் கெட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தர் (35), மார்த்தாண்டம் மதிலகம் பகுதியைச் சேர்ந்த அருள் (34), கழுவன்திட்டையைச் சேர்ந்த சதீஷ் (38) ஆகிய 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    போலீசார் தேடியபோது அவர்களின் செல்போன் சிக்னல் ஆரல்வாய்மொழி பகுதியை காட்டியது. அங்கு செங்கல் சூளை ஒன்றில் பதுங்கி இருந்த 3 பேரையும் நேற்று போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    இவர்களில் சுந்தர் தான் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகிறார். அவர் தான் மற்ற 2 பேரையும் கூட்டு சேர்த்து ஸ்டான்லி ஜோன்சை கொலை செய்தது தெரியவந்தது.

    சுந்தர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    ஸ்டான்லி ஜோன்ஸ் எனது நெருங்கிய நண்பர் ஆவார். நாங்கள் 2 பேரும் சேர்ந்து வேலைக்கு செல்வோம், இரவில் ஒன்றாக அமர்ந்து மது குடிப்போம். இந்த பழக்கத்தில் அவர் எனது வீடு வரை வந்து சென்றார்.

    அப்போது எனது மனைவியுடனும் அவர் பழகினார். அவளது அழகில் மயங்கிய ஸ்டான்லி ஜோன்ஸ் அவளை அடையத் துடித்தார். மேலும் எனது மனைவியின் செல்போனுக்கு அடிக்கடி பேசி உல்லாசத்துக்கும் அழைத்தார். ஒருமுறை மது குடித்து கொண்டு இருந்தபோது உனது மனைவியை என்னுடன் அனுப்பி வை என்று கூறி என்னிடமே கேட்டு விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவரிடம் தகராறு செய்தேன்.

    இப்படி எனது மனைவிக்கு அவர் அளித்த செக்ஸ் தொல்லைகள் அதிகரிக்கவே ஸ்டான்லி ஜோன்சை கொலை செய்ய திட்டமிட்டேன். இதற்காக சதீஷ், அருள் ஆகியோரின் உதவியை நாடினேன். எங்கள் திட்டப்படி கடந்த 16-ந் தேதி இரவு ஸ்டான்லி ஜோன்சை மதுகுடிக்கலாம் என அழைத்துச் சென்றோம்.

    மதுபோதையில் இருந்தபோது அவரை அரிவாளால் வெட்டினோம். எங்களிடம் இருந்து தப்பிக்க அவர் ரப்பர் தோட்டத்துக்குள் ஓடினார். ஆனால் அவரை விடாமல் நாங்கள் வெட்டிக் கொலை செய்தோம். பின்னர் தப்பி ஆரல்வாய்மொழியில் உள்ள செங்கல் சூளையில் பதுங்கிக் கொண்டோம். போலீசார் எங்களை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதே தகவலை அருள், சதீஷ் ஆகியோரும் போலீசாரிடம் தெரிவித்தனர்.

    கைதான 3 பேரையும் போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துகிறார்கள்.

    Next Story
    ×