search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு
    X

    சென்னையில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு

    கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் கியாஸ் நிரப்பும் ஊழியர்கள் விடுமுறையில் சென்றதால் சென்னையில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பதிவு செய்து 7 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வழங்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சமையல் கியாஸ் கடந்த 4 வருடங்களில் படிப்படியாக அதிகரித்துள்ளது. முன்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இப்போது ரூ.700-ஐ தாண்டி விட்டது.

    இதில் மத்திய அரசு மானியமாக ரூ.150 கொடுத்து வருகிறது. வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பல்வேறு சீரமைப்புகளை எண்ணை நிறுவனங்கள் செய்து வருகின்றன.

    வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் பதிவு செய்த 3 நாட்களில் சிலிண்டர் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். விற்பனை விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படுகிறதோ அதற்கு மேலாக வசூலிக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வினியோகஸ்தர்களுக்கு போன் செய்து கேட்டும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் லோடு வரவில்லை அதனால் தாமதமாகிறது என்று காரணம் கூறுகிறார்கள்.

    கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் ஊழியர்கள் குறைவாக இருந்ததால் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஒரு கியாஸ் வினியோகஸ்தர் கூறியதாவது:-

    கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் கியாஸ் நிரப்பும் ஊழியர்கள் சிலர் விடுமுறையில் சென்று விட்டனர். அதனால்அந்த பணி பாதிக்கப்பட்டது. குறைந்த அளவில் தான் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது. எங்களுக்கு வரவேண்டிய லோடு தாமதம் ஆனதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதமாகி வருகிறது.

    சிலிண்டர் வினியோகம் படிப்படியாக சீராகி வருகிறது. அதனால் இன்னும் ஒரிரு நாளில் தட்டுப்பாடு பிரச்சனை தீர்ந்து விடும் என்றார்.

    வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு சிலிண்டர் விலையை விட ரூ.40, ரூ.50 கூடுதலாக தந்தாக வேண்டும் என்று அடாவடித்தனமாக பேசுகிறார்கள். கூடுதல் தொகை தரவில்லை என்றால் சிலிண்டர் அடுத்த மாதம் சப்ளை செய்யமாட்டேன். அலைந்து திரியுங்கள் என்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.

    கியாஸ் ஏஜென்சிகளிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கையால் எண்ணை நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மீதும் வாடிக்கையாளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. சிலிண்டர் வழங்கும் ஊழியர்கள் பொதுமக்களிடம் எப்படி நடக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உறுதிமொழியினை வினியோகஸ்தர்கள் கட்டாயம் பின்பற்ற எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் ஆதங்கமாக உள்ளது. #GasCylinder #CookingGas
    Next Story
    ×