search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாம்பன், ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்
    X

    பாம்பன், ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்

    மீன்பிடித்தடைக்காலம் இன்று நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் வெள்ளிக்கிழமை காலையிலும், ராமேசுவரம் மீனவர்கள் நாளை மறுநாள் காலையிலும் மீன்பிடிக்க செல்கின்றனர்.
    ராமேசுவரம்:

    ராமேசுவரம் உள்பட தமிழக கடலோரப் பகுதிகளில் கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்வதற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தமிழக அரசு ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களை மீன்பிடித்தடைக்காலமாக அறிவிக்கப்பட்டது. இந்த தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைகிறது.

    மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் நாளை காலையில் 90 -க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

    அது போல சுழற்சி முறையில் ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லும் நிலை இருப்பதால் இந்தப்பகுதி மீனவர்கள் சனிக்கிழமை அதிகாலையில் 720-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க செல்ல தயாராக உள்ளனர்.

    மேலும் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் மீன்பிடிக்க செல்வதற்காக அனுமதி சீட்டு வழங்கியவுடன், அதை பெற்றுக் கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்கின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் முடிந்து சுழற்சி முறை மீன்பிடிப்பால் ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முதல் நாள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    ராமேசுவரம்,பாம்பன் ஆகிய பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்து வரும் மீனவர்கள் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சுழற்சி முறையில் வாரத்தில் மூன்று நாள்கள் மீன்பிடிக்க சென்று வருவார்கள்.அதன் பேரில் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் ராமேசுவரம் மீனவர்கள் வாரத்தில் திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் மீன் பிடிக்க செல்வார்கள். வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள்.

    அதுபோல மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்லும் பாம்பன் பகுதி மீனவர்கள் ஞாயிறு, செவ்வாய்,வெள்ளி ஆகிய நாட்களில் மீன்பிடிக்க செல்வார்கள். இவர்கள் சனிக்கிழமை மீன்பிடிக்க செல்லாமல் ஓய்வில் இருப்பார்கள். இந்நிலையில் 61 நாள்கள் மீன்பிடித்தடைக்காலம் இன்று இரவு நள்ளிரவோடு முடிவடைவதால் பாம்பன் பகுதி மீனவர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர். ராமேசுவரம் மீனவர்கள் 62 நாள்கள் கழித்து நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலையில் மீன்பிடிக்க செல்கின்றனர்.

    Next Story
    ×