search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குற்றாலம் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழும் காட்சி.
    X
    குற்றாலம் மெயினருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழும் காட்சி.

    குற்றாலம் பகுதியில் பலத்த மழை - அருவிகளில் வெள்ள அபாயம்

    குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.
    தென்காசி:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்யும் போது நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவும். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கும்.

    சீசன் காலங்களில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதில் குளித்து மகிழ தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வருவார்கள்.

    இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே மாத இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அப்போதே குற்றாலத்திலும் சீசன் ஆரம்பித்தது. சீசன் தொடங்கிய போது முதல் 3 நாட்கள் சாரல் மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழல் நிலவியது.
     
    அப்போது கோடை விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்த மாத தொடக்கத்தில் குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. மெயினருவி, ஐந்தருவியில் பாறையை ஒட்டியவாறு தண்ணீர் விழுந்து வந்தது. அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்தது.

    இந்நிலையில் நேற்று குற்றாலம் மலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மீண்டும் சாரல்மழை பெய்யத் தொடங்கியது. மேலும் குளிர்ந்த காற்றும் வீசுகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    மெயினருவி, ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்தனர். வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் வருகை இன்று குறைவாகவே காணப்பட்டது.

    இந்நிலையில் காலை 8 மணி அளவில் குற்றாலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த மழை பெய்தது. 9 மணி வரை நீடித்தது. மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்ததால் பிற்பகலுக்கு பிறகு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என கருதப்படுகிறது.

    இதனால் அருவியில் வரும் தண்ணீர் வரத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவ்வப்போது சாரல்மழை, குளிர்ந்த காற்று என ரம்மியமான சூழலுடன் குற்றாலத்தில் சீசன் ஜோராக இருக்கிறது.
    Next Story
    ×