search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று 20 பவுன் நகை கொள்ளை
    X

    திருச்சி அருகே இளம்பெண்ணை கொன்று 20 பவுன் நகை கொள்ளை

    திருச்சி அருகே நள்ளிரவில் இளம்பெண்ணை கொன்று 20 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பெரகம்பி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 38), விவசாயி. இவரது மனைவி லதா (30). இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

    இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் பெரகம்பி கிராமத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் வாழையூர் சாலையில் அமைந்துள்ளது. அங்கு நெல், கரும்பு, எலுமிச்சை உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர்.

    மேலும் விவசாய நிலம் அருகிலேயே வீடு கட்டி வசித்தும் வருகிறார்கள். ஆள் நடமாட்டம் மிகவும் குறைந்த பாதுகாப்பற்ற அந்த பகுதியில் வசிப்பதை தவிர்த்து கிராமத்திற்குள் வீடு கட்டி குடும்பம் நடத்துமாறு அவர்களது உறவினர்கள் கூறினர்.

    ஆனாலும் ரமேஷ்-லதா தம்பதியினர் அதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று விவசாய பணிகளை முடித்து விட்டு இரவு இருவரும் வீட்டிற்குள் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

    நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த தம்பதியினர் பதறி அடித்து எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு மர்ம நபர்கள் சிலர் உள்ளே புகுந்திருந்தனர்.

    அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் தங்களிடம் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் லதாவை சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் லதா பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அந்த கும்பல் ரமேசையும் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் மயங்கி சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் வீட்டின் தனி அறையில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 20 பவுன் நகை மற்றும் பணத்தை அள்ளிக்கொண்டு தப்பியது.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ரமேசின் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு லதா பிணமாக கிடந்தார். அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சிறுகனூர் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் கொலையுண்ட லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும், ரமேசை சிகிச்சைக்காகவும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியினர் மட்டும் தனியாக இருந்ததை தொடர்ந்து நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவர் களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×