search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    நிர்மலாதேவி விவகாரம்: பேராசிரியர் முருகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைப்பதற்காக நிர்மலாதேவியை செல்போனில் பேசத் தூண்டியதாக தேடப்பட்டு வந்த பேராசிரியர் முருகனை விருதுநகருக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். #ProfessorNirmalaDevi #CBCID
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி அக்கல்லூரியை சேர்ந்த 4 மாணவிகளை செல்போன் மூலம் தவறான பாதைக்கு அழைத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாத்தூர் மாஜிஸ்திரேட்டு அனுமதியுடன் நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து கடந்த 20-ந்தேதி முதல் விசாரித்து வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி. விசாரணையின் போது நிர்மலாதேவி ஏற்கனவே மாவட்ட போலீசாரிடம் தெரிவித்தபடியே மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளை செல்போனில் தொடர்பு கொண்டதாக தெரிவித்தார்.

    அதன் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அந்த 2 பேராசிரியர்களையும் தேடிச்சென்ற போது அவர்கள் தலைமறைவாகி இருந்தது தெரியவந்தது.

    நேற்று முன்தினம் பேராசிரியர் கருப்பசாமியை அவரது சொந்த ஊரான திருச்சுழி அருகே உள்ள நாடாகுளத்துக்கு தேடிச் சென்றனர். அவர் அங்கு இல்லாததால் அவருடைய மனைவி கனகமணியிடமும், உறவினர்களிடமும் கருப்பசாமியின் இருப்பிடம் குறித்து விசாரித்தனர். அவர்களிடம் கிடைத்த தகவலின் பேரில் அவரை தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.

    இந்தநிலையில் பேராசிரியர் முருகன் நேற்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வருகை பதிவேட்டில் கையெழுத்து போட வந்த போது சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் சிக்கினார்.

    தகவல் அறிந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி மதுரைக்கு விரைந்து சென்று பேராசிரியர் முருகனிடம் விசாரணை நடத்தினார்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மதியம் பேராசிரியர் முருகனை விசாரணைக்காக விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு ஒரு காரில் அழைத்து வந்தனர். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி மற்றும் விசாரணை குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.

    இது தவிர சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு 2 காண்டிராக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

    நேற்று முன்தினம் காமராஜர் பல்கலைக்கழக மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் பொறுப்பு வகிக்கும் கலைச்செல்வனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது, நிர்மலாதேவி கல்லூரி நிர்வாகத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின்னரும் அவரை புத்தாக்கப் பயிற்சி தொடர அனுமதித்தது ஏன் என கேட்டபோது பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைப்படி புத்தாக்க பயிற்சியின் போது பயிற்சியில் இருக்கும் பேராசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கக் கூடாது என்றும், பிற காரணங்களுக்காக அவர்களை பயிற்சியில் இருந்து வெளியேற்றக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் நிர்மலாதேவி பயிற்சியை தொடர அனுமதித்ததாகவும், இது குறித்து கல்லூரி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியதாகவும், விசாரணைக்குழுவிடம் தெரிவித்ததாக விசாரணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இயக்குனர் கலைச்செல்வன் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுமா என்று கேட்ட போது அவர் விதிமுறைப்படிதான் கடிதம் எழுதியதாகவும், பயிற்சியை தொடர அனுமதி அளித்ததாகவும் தெரிவித்ததால் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இல்லை என்று கூறினார்.

    இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகம் தான் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டில் சோதனையிட்ட போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பொருட்களை சாத்தூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒப்படைக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    போலீசாரால் தேடப்பட்டு வரும் கருப்பசாமியும் விரைவில் போலீசாரிடம் சிக்குவார் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டால் தான் பேராசிரியை நிர்மலாதேவி கூறிய உயர் அதிகாரிகள் யார்-யார் என்பது தெரியவரும் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Tamilnews #ProfessorNirmalaDevi #CBCID
    Next Story
    ×