search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மட்டும் பா.ஜனதா தயங்குவது ஏன்? -  தினகரன் கேள்வி
    X

    காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மட்டும் பா.ஜனதா தயங்குவது ஏன்? - தினகரன் கேள்வி

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரே இரவில் முடிவெடுத்த பாரதிய ஜனதா கட்சி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மட்டும் தயக்கம் காட்டுவது ஏன்? என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
    திருச்சி:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கர்நாடக மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் 8 கோடி தமிழ் மக்களை வஞ்சித்து வருகிறது.

    அடுத்து வர உள்ள பாராளுமன்ற தேர்தலில் அதிக எம்.பி.க்களை பெறவேண்டும் என்பதற்காக கர்நாடகத்திற்கு ஆதரவாக மோடி அரசு செயல்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்த விசயத்தில் நடுநிலையாக செயல்பட வேண்டிய மத்திய அரசு தமிழகத்தில் தங்களுக்கு ஓட்டு வங்கி இல்லை என்பதற்காக இப்பிரச்சினையை அரசியலாக்கும் வகையில் கர்நாடகாவிற்கு மட்டும் சாதகமாக நடந்து கொள்வது இந்தியாவின் ஒற்றுமையை பாதிக்கும்.

    கர்நாடகா சட்டபேரவை தேர்தலுக்காக பா.ஜனதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கூட காவிரி விவகாரத்தில் கர்நாடகா மாநிலத்திற்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள மாட்டோம் என தெரிவித்துள்ளார்கள். பணமதிப்பிழப்பு நடவடிக்கை உட்பட பலவற்றில் ஒரே இரவில் நடவடிக்கை எடுத்த பா.ஜனதா இதில் மட்டும் தயங்குவது ஏன்?. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மோடி தமிழகத்திற்குள் வாக்கு கேட்டு வர முடியாது.

    தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்காக அனைத்து கட்சியினரும் போராடி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியத்திற்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்களை மத்திய அரசு அடக்கி ஒடுக்கி விடலாம் என நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகி விடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி அரசு காவிரி நீர் பிரச்சினையில் அழுத்தம் கொடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

    தங்களது நாற்காலிக்கு ஆட்டம் வந்து விடுமோ என அவர்கள் பயந்து போய் உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அவர்கள் பொதுக்கூட்டம் நடத்த போவதாக அறிவித்து இருப்பது வெறும் கண் துடைப்பு நாடகமாகும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து காவிரிக்காக போராட்டம் நடத்தி வருகிறது. சோழ மண்டலத்தில் முதல் முதலாக மத்திய அரசை எதிர்த்து மார்ச் 25-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம். ஜெயலலிதா தமிழக முதல்-அமைச்சராக இருந்த போது தமிழக மக்கள் நலனுக்கு எதிரான திட்டங்களை எல்லாம் எதிர்த்து வந்தார்.

    அவரை போலவே நாமும் தமிழக மக்கள் நலனிற்கு எதிரான திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் இன்னொரு சுதந்திர போராட்டம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் அதற்கும் நாங்கள் தயாராக தான் இருக்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம்.

    ஏப்ரல் 3-ந்தேதி திருச்சியில் விவசாயிகளுடன் சேர்ந்து நடத்திய போராட்டத்துக்காக என் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். ஆட்சியில் இருப்பவர்களை நான் கோமாளி என பேசியதாக ஏற்கனவே ஒரு வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கில் விசாரணை நடைபெறும்போது அவர்களும் கோர்ட்டில் ஆஜராகத்தான் வேண்டும். அப்போது நான் பார்த்துக்கொள்கிறேன். தமிழக மக்களை பாதுகாக்க எந்த விதமான போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்.

    நாங்கள் விரைவில் ஜெயலலிதா ஆட்சியை அமைப்போம். மக்கள் தேவையறிந்து திட்டங்களை நிறைவேற்றுவோம். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிப்போம். தமிழகமும், தமிழர்களும் தலைநிமிர பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×