search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாரமங்கலம் அருகே நடத்தை சந்தேகத்தால் பெண் வெட்டிக்கொலை
    X

    தாரமங்கலம் அருகே நடத்தை சந்தேகத்தால் பெண் வெட்டிக்கொலை

    தாரமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கணவனே வெட்டிக் கொன்றார். போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகே நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியை கணவனே வெட்டிக் கொன்றார். போலீசுக்கு பயந்து அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

    தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள மல்லிக்குட்டை, நாகிரெட்டியில் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 70) கூலி தொழிலாளி. இவரது மனைவி காவேரி (60). இவர்களுக்கு குமரன் (35), என்ற மகனும் காயத்ரி (22) என்ற மகளும் உள்ளனர்.

    இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. குமரன் பெற்றோர் வீட்டின் அருகிலும், காயத்ரி மேட்டூர் அருகே உள்ள சென்ரெட்டியூர் பகுதியிலும் வசித்து வருகின்றனர்.

    மகன், மகளுக்கு திருமணம் ஆகிவிட்டாலும் பெருமாள் தன் மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டார்.

    இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று நள்ளிரவு சுமார் 1.30 மணி அளவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு மூண்டது. இந்த வயதிலும் என் மீது சந்தேகப்படுவதா? என கணவனிடம் காவேரி சண்டை போட்டார். வாக்கு வாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து காவேரியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் அவரது தலை, கழுத்து, முகம் உள்பட 8 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த காவேரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெருமாள் அய்யய்யோ இத்தனை ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு அநியாயமாக மனைவியை கொன்றுவிட்டோமே என வேதனை அடைந்தார். பின்னர் போலீசுக்கு பயந்து சாணிப்பவுடரை குடித்து விட்டு மயங்கி விழுந்தார்.

    பெருமாள் வீட்டில் இருந்து அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். காவேரி பிணமாக கிடப்பதையும் பெருமாள் மயங்கிய நிலையில் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மகன் குமரன் அலறி அடித்துக் கொண்டு அங்கு ஓடிவந்தார்.

    இதுகுறித்து அவர் தாரமங்கலம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ஓமலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் உத்தரவின் பேரில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி, சப்- இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    காவேரியின் பிணத்தை மீட்டு மருத்துவ பரி சோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலைக்கு முயன்று உயிருக்கு போராடிய பெருமாளை போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தாரமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

    Next Story
    ×