search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது
    X

    கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலையில் மின் உற்பத்தி 1000 மெகாவாட்டை எட்டியது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் முதல் அணு உலை கட்டுமானப்பணி முடிவடைந்து கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின் உற்பத்தி தொடங்கியது.

    தொடர்ந்து 2-வது அணு உலையில் கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த இரு அணு உலைகளில் இருந்தும் உற்பத்தியாகும் மின்சாரம் நெல்லை அபிசேகப்பட்டியில் உள்ள மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19-ந்தேதி 2-வது அணு உலையில் நீராவி செல்லும் குழாயில் வால்வு பழுதானது. இதனால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பழுதினை சரிசெய்யும் பணியில் இந்திய,ரஷ்ய விஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    இதனிடையே கடந்த 7- ந்தேதி காலை திடீரென முதலாவது அணு உலையிலும் வால்வு பழுதானது. நீராவி கொள்கலன் வால்வில் ஏற்பட்ட பழுதினால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதையடுத்து பழுது நீக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்றது. இரவு பகலாக இந்த பணிகள் நடைபெற்றது. இந்திய, ரஷ்ய விஞ்ஞானிகள் இந்த பணியில் ஈடுபட்டார்கள்.

    இதை தொடர்ந்து கடந்த 11-ந்தேதி பழுது சரிசெய்யப்பட்டு முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. முதலில் 180 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வந்தது. இன்று காலை மின் உற்பத்தி முழு மெகாவாட்டான 1000 மெகாவாட்டை எட்டியது. இதை தொடர்ந்து 2-வது அணு உலையில் பழுது சரிசெய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  #tamilnews

    Next Story
    ×