search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்வராக ஆசைப்படும் ஓ.பன்னீர்செல்வம் -  டி.டி.வி. தினகரன்
    X

    முதல்வராக ஆசைப்படும் ஓ.பன்னீர்செல்வம் - டி.டி.வி. தினகரன்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது என்று டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
    மதுரை:

    மதுரை மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை டி.டி.வி. தினகரன் நேற்று தொடங்கினார். மதுரையில் தங்கியிருந்த அவர் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்ட எந்த அம்சமும் இல்லை. ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு எவ்வளவு இழப்பு என்பது குறித்தும் சொல்லவில்லை.

    ரூ. 682 கோடி வரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கவர்னர் உரையில் ரூ. 6 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் இருந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் இது குறித்து எந்த தகவலும் இல்லை.

    ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ஓட்டுக்கு ரூ. 6 ஆயிரம் வீதம் 2 லட்சம் பேருக்கு பணம் கொடுத்தும் மக்கள் ஓட்டு போடவில்லை என்ற கோபத்தில் அந்த தொகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியாளர்கள் கிடப்பில் போட்டுள்ளனர்.

    வெள்ள தடுப்புச்சுவர் கட்டப்போவதாக அறிவித்தது ஏமாற்று வேலை. காவிரி நீர் கடைமடை பகுதி வரை செல்லவில்லை. இதற்கு வாய்க்கால்கள் தூர்வாராதது தான் காரணம். ஆனால் அமைச்சர்களும் அவர்களது கைத்தடிகளும் கால்வாயை தூர்வாரியதாக கூறி பில் போட்டு பணத்தை எடுக்கும் நிலை உள்ளது.

    பிரதமர் சொல்லித்தான் ஒன்று சேர்ந்தோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறுகிறார். அவர் சொல்லி தான் துணை முதல்வர் பதவியேற்றதாகவும் கூறினார். அவர் கூறுவது இன்ஸ்பெக்டரில் இருந்து சப்-இன்ஸ்பெக்டராக பதவி இறக்கம் செய்யப்பட்டது போல உள்ளது.

    பிரதமரிடம் நெருக்கமாக இருப்பதை போல் காட்டிக் கொள்ளும் இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் காவிரி மேலாண்மை அமைப்பது தொடர்பாக பிரதமரை ஏன் இதுவரை சந்தித்து பேசவில்லை?

    இரட்டை இலையை வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறார்கள். ஆட்சி தொடர வேண்டுமென்றால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

    பிரதமருக்கு பல்வேறு முக்கிய பணிகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்ததாக ஓ.பி.எஸ். கூறி வருகிறார். அவரிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களை தக்க வைத்துக் கொள்ள இப்படி பேசி இருக்கலாம்.

    தமிழகத்திற்கு தற்போது ரூ. 3 லட்சம் கோடி நிதிச்சுமை உள்ளது. அதனை சரி செய்ய எந்த திட்டமும் இல்லை. ஏதோ ஒரு சம்பிரதாயத்திற்காக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்கள். கணக்குபிள்ளை மாதிரி கணக்கை தாக்கல் செய்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம். இது கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போகிற கதையாக இருக்கிறது.

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நிரந்தர திட்டங்களும் இல்லை. வேலை வாய்ப்பை பெருக்க எந்த அறிகுறியும் இல்லை. இந்த பட்ஜெட் தான் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் ஆகும்.

    மதுரை மீனாட்சி பட்டினத்தில் இருந்து கூறுகிறேன். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து அடுத்த பட்ஜெட்டை எங்கள் நிதியமைச்சர் தாக்கல் செய்வார்.

    கட்சியில் தொண்டர்களின் ஆதரவு எங்களுக்கு முழுமையாக உள்ளது. தமிழக மக்களும் எங்களை தான் ஆதரிக்கிறார்கள். பல நிர்வாகிகள் அந்த அணியில் பணம் கொடுத்து விட்டோம். அதனை வாங்கி விட்டு இங்கே வருகிறோம் என்று எங்களிடம் பேசி வருகிறார்கள்.

    நேற்று மேலூரில் நடந்த கூட்டம் திரண்ட கூட்டமா? திரட்டப்பட்ட கூட்டமா? அல்லது கூட்டப்பட்ட கூட்டமா? என்பது உங்களுக்கே தெரியும்.

    எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு மக்கள் கூட்டம் தங்களது சொந்த செலவிலேயே எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் இந்த கூட்டத்துக்கு வந்துள்ளனர்.

    கொடிக்கு கூட வழக்கு போடுகிறார்கள். அவர்கள் சிங்கங்கள் அல்ல. குள்ளநரி வேலை தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்-அமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது. 2003-ம் ஆண்டுக்கு முன் அவர் எங்கிருந்தார்? என்பது யாருக்கும் தெரியாது. எனக்கு பின்னால் பவ்வியமாக நின்றிருக்கும் படம் என்னிடம் உள்ளது.

    2000-க்கு முன்னால் அவர் அம்மாவிடம் எடுத்துக் கொண்ட படம் இருக்கிறதா? வால்டர் வெற்றிவேல் படத்தில் சத்யராஜின் தம்பி பவ்வியமாக இருந்து வில்லனாக மாறுவார். அந்த வில்லத்தனம் தான் ஓ.பன்னீர்செல்வத்திடமும் உள்ளது.

    இரட்டை இலையை மீட்கும் வரை குக்கர் சின்னம் இருக்கும். அ.தி.மு.க.வை மீட்கும் வரை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும். இது கட்சி அல்ல. இடைக்கால ஏற்பாடு தான்.

    திராவிடம் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கட்சிக் கொடியில் ஜெயலலிதா படம் இருப்பதே திராவிடம் தான். நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அப்போது “ஸ்லீப்பர்செல்” எம்.எல்.ஏ.க்கள் எங்களுக்கு ஆதரவாக ஓட்டு போடுவார்கள்.

    அம்மா இரும்பு பெண்மணியாக திகழ்ந்தார். அவரை போல தான் அ.தி.மு.க. தொண்டர்கள் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×