search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
    X

    எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்- அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

    எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    சென்னை:

    தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா சமீபகாலமாக சட்டம்- ஒழுங்கை கெடுக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசி வருவதை தமிழ்நாட்டு மக்கள் சிறிதும் விரும்பவில்லை.

    தமிழின பற்றாளர்களையும், திராவிட சிந்தனையாளர்களையும், சிறுபான்மையின மக்களையும் இழிவுபடுத்தி வருகிறார்.

    இப்போது திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதை வரவேற்று, அதே போல் தமிழகத்தில் பெரியார் சிலையையும் தகர்ப்போம் என கருத்து கூறியிருப்பது தமிழகத்தில் கொந்தளிப்பை உருவாக்கி உள்ளது.

    லெனின் ஏழைகளின் குரலாக உலகமெங்கும் ஒலிப்பவர். தந்தை பெரி யார் சமூக நீதியின் குரலாக ஒலிப்பவர். இதை எச்.ராஜா போன்றவர்கள் உணர வேண்டும். கடும் எதிர்ப்பை தொடர்ந்து, தனக்கு தெரியாமல் தனது “அட்மின்” அக்கருத்தை பதிவிட்டிருப்பதாக சொல்வது நம்பும்படியாக இல்லை.

    மேலும் இவ்வி‌ஷயத்தில் சம்மந்தமே இல்லாமல் பசும் பொன்தேவரை முன்னிருத்தி அவர் தப்பிக்க முயல்வதையும் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் ஆன்மீக வாதியாகவும், மத நல்லிணக்க வாதியாகவும் திகழ்ந்தவர். வன்முறைகளுக்கு எதிரானவர். ஜனநாயகவாதி என்பதை எச்.ராஜா புரிந்து கொள்ள வேண்டும்.

    எச்.ராஜா தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருவதால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

    பெரியார் மீது அன்பு கொண்ட தமிழக மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.

    தமிமுன்அன்சாரி டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    லெனின் சிலையையும், பெரியார் சிலையையும், அம்பேத்கார் சிலையையும் உடைத்து விட்டார்கள். அடுத்து காந்தி சிலையா?

    சிலை உடைப்பதன் மூலமாக அவர்களின் கொள்கைகளோடு மோதுகிறார்கள். எனவே அவர்களின் கொள்கைகளை தீவிரமாக பரப்புரை செய்து தீய சக்தியை ஜனநாயக வழியில் வீழ்த்துவோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×