search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருக்கோவிலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை
    X

    திருக்கோவிலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் அடித்துக்கொலை

    திருக்கோவிலூர் அருகே 4-ம் வகுப்பு மாணவன் உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    திருக்கோவிலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வெள்ளம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவர் இறந்துவிட்டார். இவரது மனைவி ஆராயி(வயது 45). கூலிவேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு பாண்டியன்(25), சரத்குமார் (22), விஜயக்குமார்(19), தமயன்(9) ஆகிய 4 மகன்களும், அஞ்சலட்சுமி(17), தனம்(15) ஆகிய 2 மகள்களும் உள்ளனர்.

    இவர்களில் பாண்டியன், சரத்குமார், விஜயக்குமார் ஆகியோர் பெங்களூரில் கூலிவேலை பார்த்து வருகின்றனர். அஞ்சலட்சுமி திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார்.

    ஆராயி வெள்ளம் புத்தூரில் தனது மகள் தனம், மகன் தமயன் ஆகியோருடன் வசித்து வருகிறார். தனம் அங்குள்ள பள்ளியில் 8-ம் வகுப்பும், தமயன் 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    நேற்று இரவு வீட்டில் ஆராயி, தனம், தமயன் ஆகியோர் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் சிலர் வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஆராயி உள்பட 3 பேரையும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் தமயன் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தான்.

    இந்த தாக்குதலில் ஆராயி, தனம் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் மர்மமனிதர்கள் அங்கிருந்த தப்பி சென்று விட்டனர்.

    இன்று காலை பக்கத்து வீட்டில் வசிக்கும் தனத்தின் பள்ளித்தோழி சினேகா ஆராயி வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ரத்தவெள்ளத்தில் 3 பேரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சல் போட்டாள்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் கிடந்த ஆராயி, தனம் ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார், திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்னசபாபதி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். வீட்டிற்குள் பிணமாக கிடந்த தமயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வைத்தனர்.

    வீடு புகுந்து மாணவனை அடித்துக் கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர். முன்விரோதம் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உருட்டுக்கட்டையால் மாணவனை அடித்துக் கொலை செய்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    Next Story
    ×