search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்தனர் - மீனவர்கள் கண்ணீர் பேட்டி
    X

    இலங்கை கடற்படையினர் சித்ரவதை செய்தனர் - மீனவர்கள் கண்ணீர் பேட்டி

    இலங்கை கடற்படையினர் எங்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். அவர்கள் எங்களது கைகளை கட்டி தாக்கி சித்ரவதை செய்தனர் என்று மீனவர்கள் கூறினர்.
    காரைக்கால்:

    தமிழகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

    கடந்த 3 மாதத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துசென்று யாழ்பாணம் சிறைகளில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 109 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுதலை செய்தது.

    விடுதலை செய்யப்பட்ட தமிழக மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 46 பேரும், நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 30 பேரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 23 பேரும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 10 பேரும் என 109 மீனவர்களை நேற்று மதியம் சர்வதேச எல்லை பகுதியில் இலங்கை கடற்படை, இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது.

    அதனை தொடர்ந்து அவர்கள் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணிதுர்காதேவி மற்றும் அதுல்யா எனும் ரோந்து கப்பல்கள் மூலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு இரவு 7.30 மணி அளவில் அழைத்து வரப்பட்டனர்.

    மீனவர்களை கீழவேளுர் எம்.எல்.ஏ. மதிவாணன், நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்றனர். துறைமுகம் வந்த மீனவர்களுக்கு உணவு, உடைகள் வழங்கி தமிழக அரசு செலவில் அவரவர் சொந்த ஊருக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். விடுதலையான மீனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்ணீர் மல்க வரவேற்று அழைத்துச் சென்றனர்.

    முன்னதாக காரைக்கால் வந்த மீனவர்கள் கண்ணீர் மல்க கூறியதாவது:-

    இலங்கை கடற்படையினர் எங்களை எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடித்து சென்றனர். அவர்கள் எங்களது கைகளை கட்டி தாக்கி சித்ரவதை செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து செல்வதை மத்திய, மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

    தமிழகத்தை சேர்ந்த 27 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். மேலும் காரைக்கால் மீனவர்களுக்கு சொந்தமான 177 படகுகள் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்டு அவர்கள் வசம் உள்ளது. அதனை மீட்டு தரவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #tamilnews
    Next Story
    ×