search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு
    X

    தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு

    தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு தூத்துக்குடியில் கடந்த 17-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. மாநாடு நிறைவு நாளான நேற்று கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பேசினார். மாநாட்டில் கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரின் செந்தொண்டர் அணிவகுப்பு நேற்று மாலை நடந்தது. சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு கொடியசைத்து அணிவகுப்பை தொடங்கி வைத்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சிவப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.

    அணிவகுப்பு பாளையங்கோட்டை ரோடு, அண்ணா நகர், எட்டயபுரம் ரோடு வழியாக பொதுக்கூட்ட திடலை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அண்ணாநகர் 7வது தெரு விலக்கு அருகில் அணிவகுப்பு வந்தபோது, ஒருநபர் மோட்டார் சைக்கிளில் அந்த அணிவகுப்பை கடக்க முயன்றார். அவரை கட்சி தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர்.

    அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை அணிவகுப்பை கடந்து செல்ல அனுமதிக்குமாறு தொண்டர்களிடம் கூறினர். அப்போது போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே போலீசார், அந்த பகுதியில் உள்ள ஒரு கடை முன்பு அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கம்புகளை எடுத்து தொண்டர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.



    இதில் போலீசார் தாக்கியதில் மதுரையை சேர்ந்த சேதுராம் மகன் சோலை பெருமாள் (வயது 34), திருப்பூர் வேலம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் விமல் (23), திண்டுக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் விஷ்ணுவர்த்தன் (30), திருப்பூரை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் அகிலேஷ் (5) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இதேபோன்று தொண்டர்கள் தாக்கியதில், தென்பாகம் போலீஸ் ஏட்டு சேகர், ஆயுதப்படை போலீஸ்காரர் ராம்சுந்தர் ஆகிய இருவரும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியிலும், சிறுவன் உள்பட 2 பேர் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இதற்கிடையே தொண்டர்களில் சிலர், போலீஸ் வாகனம் மீது கல் மற்றும் கம்புகளை வீசி தாக்கினர். அதன்பின்னர் அவர்கள் அண்ணா நகர் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்நிலையில் காயம் அடைந்த காவலர்கள் அளித்த புகாரின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த திருப்பூர் விமல் (25), திண்டுக்கல் விஷ்ணு வரதன் உள்ளிட்ட சிலர் மீது 7 பிரிவுகளின் கீழ் தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×