search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே விபத்து: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாதுகாப்பு போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி
    X

    திண்டுக்கல் அருகே விபத்து: அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாதுகாப்பு போலீஸ்காரர் உள்பட 2 பேர் பலி

    திண்டுக்கல் அருகே கார்-லாரி மோதியதில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பாதுகாப்பு போலீஸ்காரர் உள்பட 2 பேர் இறந்தனர்.

    திண்டுக்கல்:

    தேனி மாவட்டம் கம்பம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜக்கையன். இவருக்கு பாதுகாப்பு போலீஸ்காரராக குமார் (வயது 30) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் எப்போதும் எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பாக சென்று வருவார்.

    இன்று காலை ஜக்கையன் எம்.எல்.ஏ சென்னையில் இருந்து ரெயில் மூலம் திண்டுக்கல் வந்து அங்கிருந்து கம்பம் வருவதாக குமாருக்கு தெரிவித்திருந்தார். இதற்காக போலீஸ்காரர் குமார் காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டு இருந்தார். இந்த காரை கம்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணையா (30) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த கார் திண்டுக்கல் அருகே சித்தையன்கோட்டை பகுதியில் சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிரே லாரி வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியது. மோதிய வேகத்தில் கார் நிலை குலைந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் போலீஸ்காரர் குமார், கண்ணையா ஆகியோர் சம்பவ இடத்தில் பலியானார்கள். இதற்கிடையில் ஜக்கையன் எம்.எல்.ஏ. திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். விபத்து குறித்த விபரம் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேர் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

    Next Story
    ×