search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8-வது முறையாக தகுதி- பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு
    X

    8-வது முறையாக தகுதி- பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு

    குவாலிபையர் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 8-வது முறையாக தகுதி பெற்றதால் பந்து வீச்சாளர்களுக்கு டோனி பாராட்டு தெரிவித்துள்ளர்.

    விசாகப்பட்டினம்:

    ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த ‘குவாலிபையர்2’ ஆட்டத்தில் முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன்னே எடுக்க முடிந்தது.

     ரிஷப் பந்த் அதிகப்பட்சமாக 25 பந்தில் 38 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), காலின் முன்ரோ 24 பந்தில் 27 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஹர்பஜன்சிங், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும், இம்ரான்தாகீர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    148 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி விளையாடியது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. ஒரு ஓவர் எஞ்சி இருந்த நிலையில் வெற்றி கிடைத்தது.

    வாட்சன் 32 பந்தில் 50 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்), டுபெலிசிஸ் 39 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். போல்ட், இஷாந்த்சர்மா, அக்‌ஷர் படேல், அமித் மிஸ்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    பந்து வீச்சாளர்களின் சிறப்பாக செயல்பட்டதாலும், தொடக்க வீரர்களின் அபாரமான ஆட்டத்தாலும் சூப்பர் கிங்ஸ் 8-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    வெற்றிக்கு பந்து வீச்சாளர்களே காரணம், அவர்களால்தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றோம் என்று கேப்டன் டோனி பவுலர்களை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விக்கெட்டுகளை கைப்பற்றுவது முக்கியமானது. பந்து வீச்சாளர்களுக்கே அனைத்து பாராட்டும் சேரும். இந்த சீசனில் பந்து வீச்சு துறையால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். இதற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பவுலர்கள் மிகவும் அபாரமாக செயல்பட்டு டெல்லி அணியை மிகப்பெரிய ஸ்கோரை எடுக்க அனுமதிக்க வில்லை.


    டெல்லி அணி பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்டது. ஏராளமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். எங்களது சுழற்பந்து வீரர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றி அவர்களுக்கு நெருக்கடியை கொடுத்து விட்டனர்.

    தொடக்க வீரர்கள் (வாட்சன், டுபெலிசிஸ்) சிறப்பாக ஆடினார்கள். அவர்களே ஆட்டத்தை முடித்து இருக்க வேண்டும். எந்த வகையிலும் இந்த வெற்றியை பெற்று இருந்தாலும் மகிழ்ச்சிதான். எங்கள் அணி வீரர்கள் பொறுப்பை உணர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ‘குவாலிபையர்2’ போட்டி மூலம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதுதான் எங்களது வழக்கமான வழியாகும். கடந்த முறை மட்டும் விதி விலக்கு.

    இவ்வாறு டோனி கூறி உள்ளார்.

    முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழையும் வாய்ப்பை டெல்லி அணி இழந்தது. தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ஷிரேயாஸ் அய்யர் கூறியதாவது:-

    பவர்பிளேயில் 2 விக்கெட்டை இழந்தது ஏமாற்றம். அதில் இருந்து மீள்வதே கடினமாகி விட்டது. சென்னை அணி சுழற் பந்து வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். சிறந்த பார்ட்னர்ஷிப் அமைய வில்லை.

    ஒட்டு மொத்தத்தில் இந்த சீசனில் சிறப்பாக ஆடினோம். கேப்டன் பதவி வகித்தது பெருமை அளித்தது. சீனியர் வீரர்களான டோனி, வீராட்கோலி, ரோகித்சர்மா ஆகியோரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×