search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்? டோனி விளக்கம்
    X

    19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்? டோனி விளக்கம்

    பெங்களூர் அணிக்கெதிரான ஆட்டத்தின் 19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன் என்பது குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #RCBvsCSK
    பெங்களூர்:

    ஐ.பி.எல். போட்டியில் பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணி 1 ரன்னில் பெங்களூரிடம் தோற்றது.

    பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    பார்த்தீவ் படேல் 37 பந்தில் 53 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்), மொய்ன் அலி 16 பந்தில் 26 ரன்னும் (5 பவுண்டரி) எடுத்தனர். தீபக் சாஹர், ஜடேஜா, பிராவோ தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    162 ரன் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடியது.

    அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் 1 ரன்னில் தோற்றது. பெங்களூர் அணி கடைசி பந்தில் வெற்றியை பெற்றது.

    கேப்டன் டோனியின் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 48 பந்தில் 84 ரன் (5 பவுண்டரி, 7 சிக்சர்) எடுத்தார். ஸ்டெயின், உமேஷ் யாதவ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    இந்த ஆட்டத்தில் சென்னை அணி ஒரு ஆட்டத்தில் 83 ரன்னில் 5 விக்கெட்டை இழந்தது. இதனால் மோசமான தோல்வி ஏற்படும் என்று கருதப்பட்டது. 6-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் டோனி தனி ஒருவராக போராடினார். அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆட்டத்தின் கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன் தேவைப்பட்டது, உமேஷ் யாதவ் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியும் 2-வது பந்தில் சிக்சரும், 3-வது பந்தில் சிக்சரும் டோனி விளாசினார். 4-வது பந்தில் 2 ரன்னும், 5-வது பந்தில் சிக்சரும் அவர் அடித்தார்.

    ஆட்டத்தின் கடைசி பந்தில் 2 ரன் தேவைப்பட்டது. டோனி இந்த பந்தில் ரன் எடுக்க தவறினார். ‌ஷர்துல்தாகூர் ரன் அவுட் ஆனார். இதனால் பரபரப்பான ஆட்டத்தில் 1 ரன்னில் சென்னைக்கு தோல்வி ஏற்பட்டது. டோனியின் அதிரடி பலன் இல்லாமல் போனது.

    ஆட்டத்தின் 19-வது ஓவரில் டோனி 3 முறை ஒரு ரன்னுக்கு ஓடாமல் இருந்தார்.

    எதிர் முனையில் பிராவோ இருந்ததால் டோனி ஒரு ரன்னுக்கு ஓடி இருக்கலாம். அப்படி செய்து இருந்தால் கடைசி ஓவரில் நெருக்கடியை குறைத்து இருக்கலாம். அந்த ஓவரின் கடைசி பந்தில் பிராவோவும் ஆட்டம் இழந்தார்.

    19-வது ஓவரில் டோனி 3 முறை ஒரு ரன்னுக்கு ஓடாதது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக டோனி அளித்த விளக்கம் வருமாறு:-

    ஆடுகளம் கொஞ்சம் கணிக்க முடியாதபடி இருந்தது. புதிதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன் விளையாடுவது கடினமானது. பிராவோ 3 பந்துகளை மட்டுமே சந்தித்து இருந்தார். இதனால்தான் 1 ரன்னுக்கு ஒட நான் மறுத்தேன். மிகப் பெரிய ஷாட்டுக்காக நான் காத்திருந்தேன்.

    பந்துக்கும், ரன்னுக்கும் உள்ள வித்தியாசம் அதிகமாக இருந்ததால் அதிரடியாக ஆடுவது அவசியம் ஆனது. இதன் காரணமாகவே நான் அப்படி செய்தேன். நாங்கள் போராடி 1 ரன்னில்தான் தோற்றது.

    இது ஒரு சிறந்த போட்டியாக அமைந்தது. நாங்கள் பெங்களூர் அணியை குறைந்த ரன்களில் கட்டுப்படுத்தினோம். எங்கள் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மோசமாக ஆடினார்கள். அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் பின் வரிசை பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி ஏற்பட்டது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்ததால் எங்களது கணக்கு தவறாகி விட்டது.

    இவ்வாறு டோனி கூறினார்.

    சென்னை அணி 3-வது தோல்வியை தழுவியது. 11-வது ஆட்டத்தில் அந்த அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை நாளை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. #MSDhoni #RCBvsCSK
    Next Story
    ×