search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மூத்த வக்கீல் பிஎஸ் நரசிம்மாவை பிசிசிஐ-யின் மத்தியஸ்தராக நியமித்தது உச்சநீதிமன்றம்
    X

    மூத்த வக்கீல் பிஎஸ் நரசிம்மாவை பிசிசிஐ-யின் மத்தியஸ்தராக நியமித்தது உச்சநீதிமன்றம்

    பிசிசிஐ-யின் சிஇஓ மற்றும் மாநில சங்கங்கள் இடையிலான பிரச்சனையில் மத்தியஸ்தராக மூத்த வக்கீல் பிஎஸ் நரசிம்மாவை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. #BCCI
    இந்திய கிரிக்கெட் வாரியத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வர உச்சநீதிமன்றம் லோதா தலைமையிலான ஒரு கமிட்டியை நியமித்தது.

    இந்த கமிட்டி பல பரிந்துரைகளை ஒரு அறிக்கையாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. இதில் குறிப்பிட்ட வயதிற்கு மேற்பட்டவர்கள் பிசிசிஐ பதவிகளில் போட்டியிடக் கூடாது, இரண்டு முறைக்கு மேல் தொடர்ந்து பதவி வகிக்கக்கூடாது, அரசியல் பதவியில் இருக்கும் நபர் தலைவராக இருக்கக்கூடாது, ஒரு மாநிலத்திற்கு ஒரு வாக்கு போன்ற முக்கியமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிசிசிஐ-க்கு உத்தரவிட்டது.

    இதனால் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜனதா எம்பி அனுராக் தாகூர் தனது பதவியில் இருந்து விலகினார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன் உள்பட பலருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இதனால் லோதா கமிட்டி பரிந்துரையை மாநில சங்கங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் பரிந்துரைகளை செயல்படுத்த வினோத் ராய் தலைமையில் நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. நான்கு பேரில் இரண்டு பேர்தான் தற்போது அந்தக்குழுவில் உள்ளன. ஒருவர் தலைவர் வினோத் ராய், மற்றொருவர் டயானா எடுல்ஜி.

    இவர்களால் பிசிசிஐ-யில் சீர்திருத்தங்களை செயல்படுத்த முடியவில்லை. பிசிசிஐ-யின் பெரும்பாலான முடிவுகளை வினோத் ராய்தான் எடுக்கிறார். மாநில சங்கங்களுக்கு பிசிசிஐ நிதி ஒதுக்குவதில் சில பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் சர்வதேச போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டடுள்ளது.

    இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    நிர்வாகக்குழுவுக்கும், மாநில சங்கங்களுக்கும் இடையிலான பிரச்சனையை தீர்க்க மூத்த வக்கீலான பிஎஸ் நரசிம்மாவை மத்தியஸ்தராக நியமித்துள்ளது. மேலும், பிசிசிஐ பிரச்சனையை தீர்க்க குறைதீர் அதிகாரியாக (amicus) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற நீதிபதி டி கே ஜெயினுக்கும் உதவியாக இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
    Next Story
    ×