search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய சீனியர் ஆக்கி - இறுதிப்போட்டியில் தமிழக அணி
    X

    தேசிய சீனியர் ஆக்கி - இறுதிப்போட்டியில் தமிழக அணி

    தேசிய சீனியர் ஆக்கி போட்டியின் அரைஇறுதியில் தமிழகம், சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. #NationalHockey #Championship
    சென்னை:

    9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று காலை நடந்த முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, இந்திய விளையாட்டு ஆணையத்தை (சாய்) எதிர்கொண்டது. இளம் வீரர்களை கொண்ட சாய் அணியும், அனுபவம் மற்றும் இளம் வீரர்களை உள்ளடக்கிய தமிழக அணியும் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன.

    9-வது நிமிடத்தில் சாய் அணி வீரர் பாபி சிங் தாமி கோல் அடித்தார். 16-வது நிமிடத்தில் தமிழக அணி பதில் கோல் திருப்பி சமநிலையை எட்டியது. ஜோஸ்வா கடத்தி கொடுத்த பந்தை சண்முகம் கோலுக்குள் திணித்தார். 20-வது நிமிடத்தில் தமிழக அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி வினோதன் கோல் அடித்து தமிழக அணிக்கு முன்னிலை தேடிக் கொடுத்தார். இந்த முன்னிலை சற்று நேரத்தில் முடிவுக்கு வந்தது. 25-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி சாய் அணி வீரர் மொகித் குமார் கோல் அடித்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    40-வது நிமிடத்தில் தமிழக அணி வீரர் ராயர் அபாரமாக கோல் அடித்தார். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே சாய் அணி பதில் கோல் திருப்பியது. பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி அந்த அணி வீரர் ராகுல் குமார் கோல் அடித்து சமநிலையை எட்ட வைத்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் வழக்கமான ஆட்ட நேரம் முடிவில் இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தன.

    இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட்-அவுட்’ முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளில் தமிழக அணியினர் 3 கோல் அடித்தனர். 2 வாய்ப்பை தவறவிட்டனர். தமிழக அணியில் ஷூட்-அவுட்டில் செந்தில் நாயகம், ஆர்.மணிகண்டன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் கோல் அடித்தனர். சாய் அணியில் விஷால், லோகேஷ் போரா ஆகியோர் மட்டுமே கோல் அடித்தனர். ‘ஷூட்-அவுட்’ முடிவில் தமிழக அணி 6-5 என்ற கோல் கணக்கில் சாய் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    பிற்பகலில் நடந்த 2-வது அரைஇறுதி ஆட்டத்தில் மத்திய தலைமை செயலகம்-பெங்களூரு அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டமும் 3-3 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இதனை அடுத்து பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை பின்பற்றப்பட்டது. ஷூட்-அவுட்டில் மத்திய தலைமை செயலக அணி 4-3 என்ற கோல் கணக்கில் (மொத்தத்தில் 7-6) பெங்களூரு அணியை பதம் பார்த்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் தமிழ்நாடு-மத்திய தலைமை செயலக அணிகள் மோதுகின்றன. முன்னதாக காலை 7.30 மணிக்கு நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் சாய்-பெங்களூரு அணிகள் சந்திக்கின்றன.

    இறுதிப்போட்டிக்கு முன்னேறியதன் மூலம் தமிழ்நாடு, மத்திய தலைமை செயலக அணிகள் மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் இந்த மாதம் இறுதியில் நடைபெறும் ‘ஏ’ டிவிசன் தேசிய சீனியர் ஆக்கி போட்டிக்கு தகுதி பெற்றன.
    Next Story
    ×