search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக் கோப்பைக்கான திட்டத்தில் ரிஷப் பந்த் இருக்கிறார்: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்
    X

    உலகக் கோப்பைக்கான திட்டத்தில் ரிஷப் பந்த் இருக்கிறார்: தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத்

    உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்த் இருப்பார் என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார். #BCCI #RishabhPant
    இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். இங்கிலாந்து தொடரின்போது தினேஷ் கார்த்திக் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-வது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டார். ரிஷப் பந்த் அறிமுகம் ஆனார். அறிமுக டெஸ்டில் 24, 1 ரன் அடித்தார். 4-வது டெஸ்டில் 0, 18 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில் 5 ரன்னில் வெளியேறிய ரிஷப் பந்த், 2-வது இன்னிங்சில் 114 ரன்கள் குவித்தார். இதனால் ரிஷப் பந்த் மீது அனைவருடைய பார்வையும் திரும்பியது.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தலா 92 ரன்கள் குவித்து அசத்தினார். அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் களம் இறங்கவில்லை. 2-வது போட்டியில் 17 ரன்களும், 3-வது ஆட்டத்தில் 24 ரன்களும் சேர்த்ததால் கடைசி இரண்டு போட்டியில் இருந்து நீக்கப்பட்டார்.

    டி20 தொடரில் முறையே 1, 5, 58 என ரன்கள் சேர்த்தார். ஆனால் தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக பணியாற்றினார். ரிஷப் பந்த் சிறப்பு பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இவரது பேட்டிங் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் டோனி டி20 போட்டிக்கான இந்திய அணியில் சேர்க்காதது விமர்சனத்தை எழுப்பியது.

    இதனால் ஆஸ்திரேலியா தொடருக்கான டி20 அணியில் இடம் பிடித்த ரிஷப் பந்திற்கு ஒருநாள் தொடரில் இடம் கிடைக்கவில்லை. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 தொடரில் விக்கெட் கீப்பராக பணியாற்றிய ரிஷப் பந்த் முதல் ஆட்டத்தில் 20 ரன்கள் சேர்த்தார். 3-வது ஆட்டத்தில் டக்அவுட் ஆனார். 2-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    மேலும், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழக்காவிடிலும் 25, 30 என ஓரளவிற்கு ரன்கள் சேர்த்தார். இதனால் ரிஷப் பந்த்-ஐ ஏன் அணியில் சேர்த்தார்கள் என்ற விமர்சனம் எழும்பியது.



    இந்நிலையில்தான் சிட்னி டெஸ்டில் வீறுகொண்டு எழுந்த ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் விளாசினார். இவரது அதிரடி ஆட்டத்தில் இந்தியா 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 300 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது. கடந்த 30 வருடத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாலோ-ஆன் ஆக முக்கிய காரணமாக இருந்தார். மேலும், 20 கேட்ச்கள் பிடித்து அசத்தினார். இதனால் ஒருநாள் போட்டியில் ரிஷப் பந்த்-ஐ ஏன் சேர்த்திருக்கக்கூடாது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

    இந்நிலையில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி திட்டத்தில் ரிஷப் பந்திற்கு கட்டாயம் இடமுண்டு என்று தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘உலகக் கோப்பைக்கான விக்கெட் கீப்பர்களில் ஒருவராக ரிஷப் பந்த் இருப்பார். அதில் எந்த சந்தேகமும் இல்லை. விக்கெட் கீப்பர்களை தேர்வு செய்யும் வேலைகள் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. உலகக் கோப்பை திட்டத்தில் ரிஷப் பந்த் ஒரு பகுதியாக இருப்பார்.

    வீரர்களின் வேலைப்பளு விவகாரத்தில்தான் ரிஷப் பந்த் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தற்போது எத்தனை வீரர்கள் ஓய்வில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்க்கலாம். ரிஷப் பந்த் டி20 போட்டியில் விளையாடியுள்ளார். அதன்பின் முக்கியத்துவம் வாய்ந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். உடல் ஏற்கனவே சோர்வடைந்திருக்கும். சிறு உபாதை உள்ளது. அதில் குணமடைய வேண்டும். அவர் அதிக வலிமையுடன் அணிக்கு திரும்புவார்.

    இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பந்துதான். அவருக்கு நாங்கள் சில இலக்கு நிர்ணயம் செய்தோம். நாங்கள் அவருக்கு நிர்ணயம் செய்ததை அவர் நிறைவேற்றிவிட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் சிட்னி டெஸ்ட் மிகப்பெரிய திருப்பு முனையாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×