search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி
    X

    பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் - பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேட்டி

    முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    1947-ம் ஆண்டு முதல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற சோகத்தை இந்திய அணியினர் நேற்று போக்கினார்கள்.

    அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பு மிக்க வெற்றியை தனதாக்கியது. பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், ‘இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. அடிலெய்டு டெஸ்ட் போட்டியில் வெற்றி கண்டு தொடரை வெற்றியுடன் தொடங்கி இருப்பது வீரர்களுக்கு நல்ல உற்சாகத்தை அளிக்கும். நல்ல தொடக்கம் காண்பது நம்பிக்கையை அளிக்கும்.

    இந்த போட்டி தொடரில் வேகப்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். எனவே அவர்களுக்கு போதிய ஓய்வு அளிக்க வேண்டியது அவசியமானதாகும். அவர்கள் வலைப்பயிற்சியில் அதிக நேரத்தை செலவிடாமல் தவிர்க்க வேண்டும். அடுத்த டெஸ்ட் போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் அதிக வேகம் கொண்டதாக இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
    முதல் இன்னிங்சில் நமது பந்து வீச்சாளர்கள் அருமையாக செயல்பட்டனர். முதல் இன்னிங்சில் நமது பேட்ஸ்மேன்கள் சில தேவையற்ற ஷாட்களை ஆடினார்கள். அதில் இருந்து பேட்ஸ்மேன்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். புஜாரா மிகவும் அருமையாக செயல்பட்டார். விக்கெட் கீப்பிங் பணியில் ரிஷாப் பான்ட் நன்றாக செயல்படுகிறார். நாதன் லயன் கேட்ச்சை கோட்டை விட்டது போன்ற தவறை அவர் மீண்டும் செய்யமாட்டார் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ரவிசாஸ்திரி கூறினார். #AUSvIND #RaviShastri
    Next Story
    ×