search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி இன்று தொடக்கம் : இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதல்
    X

    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி இன்று தொடக்கம் : இந்தியா - தென்ஆப்பிரிக்கா மோதல்

    16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஆக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    புவனேஸ்வரம்:

    உலக கோப்பை ஆக்கி போட்டி 1971-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் நடந்த தொடக்க போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அடுத்த 2 போட்டிகள் 2 ஆண்டுகள் இடைவெளியிலும், 4-வது போட்டி 3 ஆண்டுகள் இடைவெளியிலும் நடைபெற்றது.

    1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக கோப்பை ஆக்கி போட்டி நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.



    14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கி டிசம்பர் 16-ந் தேதி வரை நடக்கிறது.

    இதில் 16 நாட்டு அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் இடத்தில் உள்ளதுமான ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள பெல்ஜியம், 5-வது இடத்தில் இருக்கும் இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.

    ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் இடம் பிடித்துள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு முன்னேறும். கடைசி இடம் பெறும் அணிகள் கால்இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறும்.

    ஒவ்வொரு பிரிவிலும் 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் கிராஸ் ஓவர் முறையில் மற்ற பிரிவில் 2-வது, 3-வது இடத்தை பெறும் அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். வருகிற 9-ந் தேதியுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. 2-வது சுற்று ஆட்டங்கள் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடக்கிறது. வருகிற 12, 13-ந் தேதிகளில் கால்இறுதி ஆட்டமும், வருகிற 15-ந் தேதி அரைஇறுதி ஆட்டமும், வருகிற 16-ந் தேதி இறுதிப்போட்டியும் நடை பெறுகிறது.

    மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி 43 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக கோப்பை உச்சி முகர்ந்து இழந்த பெருமையை மீட்டெடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். 8 முறை ஒலிம்பிக் சாம்பியனான இந்திய அணி உலக கோப்பையை ஒரு முறை மட்டுமே வென்றுள்ளது. 1975-ம் ஆண்டு கோலாலம்பூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் அஜித் பால்சிங் தலைமையிலான இந்திய அணி இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதன் பிறகு இந்திய அணி உலக கோப்பை போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதிகபட்சமாக 5-வது இடத்தையே பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 9-வது இடத்தை பிடித்தது.

    இந்த உலக கோப்பை போட்டி தொடரில், தொடர்ந்து 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம் ஆகியவை இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும், துடிப்பு மிக்க இளம் வீரர்களும் சம அளவில் இடம் பிடித்துள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த 7 இளம் வீரர்கள் இந்த உலக கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பெற்றுள்ளனர். தடுப்பு ஆட்டத்தில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்தினால் இந்திய அணி சாதிக்க வாய்ப்பு உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் இந்திய அணி புதிய வரலாறு படைக்குமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

    உலக கோப்பை போட்டியையொட்டி ஒடிசா மாநிலம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த போட்டிக்காக ஒடிசா மாநில அரசு ஏறக்குறைய ரூ.82 கோடி செலவிட்டுள்ளது. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் மற்றும் வீரர்கள் தங்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் பெல்ஜியம்-கனடா (மாலை 5 மணி), இந்தியா-தென்ஆப்பிரிக்கா (இரவு 7 மணி) அணிகள் மோதுகின்றன. போட்டி நடைபெறும் ஸ்டேடியம் 15 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்டதாகும். முதல் நாள் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

    உலக கோப்பை ஆக்கி போட்டி இந்தியாவில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 1982-ம் ஆண்டு மும்பையில் நடந்த போட்டியில் இந்தியா 5-வது இடமும், 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த போட்டியில் இந்தியா 8-வது இடமும் பெற்றது.  #HockeyWorldCup2018 #India #SouthAfrica
    Next Story
    ×