search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவில்லை- கேதர் ஜாதவ்
    X

    ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று தெரியவில்லை- கேதர் ஜாதவ்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான கடைசி மூன்று ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்று தெரியவில்லை என கேதர் ஜாதவ் தெரிவித்துள்ளார். #INDvWI
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக விளையாடுபவர் கேதர் ஜாதவ். ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேதர் ஜாதவ் விளையாடினார். முதல் போட்டியில் விளையாடும்போது அவருக்கு தொடைப்பகுதியில தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்தார்.

    அதன்பின் சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அப்போதும் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தொடரில் இருந்து வெளியேறினார்.

    தற்போது இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிக்கான இந்திய அணியில் கேதர் ஜாதவ் இடம்பெறவில்லை.

    கேதர் ஜாதவ் உடற்தகுதி பற்றி தெரிந்து கொள்ள தியோதர் டிராபி தொடரில் விளையாட வேண்டும் என்று தேர்வுக்குழு கேட்டுக்கொண்டது. தியோதர் டிராபியில் சிறப்பாக பேட்டிங் செய்ததன் உடன் பந்தும் வீசி தனது உடற்தகுதியை நிரூபித்தார் கேதர் ஜாதவ்.

    இந்நிலையில் நேற்று கடைசி மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்த அணியில் கேதர் ஜாதவிற்கு இடம் கிடைக்கவில்லை.



    இதனால் கேதர் ஜாதவ் அதிர்ச்சியடைந்தார். தன்னை தியோதர் டிராபியில் விளையாட சொல்லிவிட்டு அணியில் இடம் கொடுக்கவில்லையே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. இந்நிலையில் ‘‘தேர்வுக்குழு என்னை ஏன் தேர்வு செய்யவில்லை என்பதை நான் ஆராய வேண்டியது அவசியம். அவர்களுடைய தற்போதைய திட்டம் என்ன வென்று எனக்குத் தெரியாது. ஏனென்றால் தற்போது நான் அணியில் இல்லை. நான் ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளனர்.

    இந்திய அணியில் இடம் கிடைக்காத முரளி விஜய் மற்றும் கருண் நாயர் ஆகியோருக்கு தேர்வுக்குழு மீது தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×