search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்
    X

    இங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். #INDvENG #RaviShastri
    புதுடெல்லி:

    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.

    இங்கிலாந்துடன் மூன்று 20 ஓவர் போட்டி, 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் 5 டெஸ்டில் ஆடியது. இதில் 20 ஓவர் தொடரை மட்டும் இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    ஆனால் ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கிலும், டெஸ்ட் தொடரை 1-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்தது. டெஸ்ட் தொடரில் விராட் கோலி அபாரமாக விளையாடியும் பலன் இல்லாமல் போனது.

    இந்திய அணி 3-வது டெஸ்டில் மட்டும் 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும், 4-வது டெஸ்டில் 60 ரன் வித்தியாசத்திலும், 5-வது டெஸ்டில் 118 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்று இருந்தது.


    இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் ஏற்பட்ட இந்த தோல்வியால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தது. குறிப்பாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். பயிற்சியாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    இங்கிலாந்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தும் அணி நிர்வாகம் நேரில் ஆஜராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பி.சி.சி.ஐ.) நிர்வாகிக்கும் குழு சம்மன் அனுப்பி இருந்தது. இதை தொடர்ந்து பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிர்வாக குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு அறிக்கை ஒன்றையும் சமர்பித்தார்.

    வினோத்ராய் தலைமையிலான நிர்வாக குழுவை ரவிசாஸ்திரி ஆசிய கோப்பை போட்டிக்கு புறப்படும் முன்பு சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    தோல்விக்கு ரவி சாஸ்திரி கூறிய காரணம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ‘டாஸ்’ போடுவதில் விராட் கோலி தவறான முடிவு எடுத்ததால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

    ‘டாசில்’ தோற்றதால் தோல்வி அடைந்தோம் என்று ரவிசாஸ்திரி நிர்வாக குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய பயணத்தில் நல்ல முடிவு ஏற்பட வேண்டும் என்று அவரிடம் நிர்வாக குழு தெரிவித்தது.

    ஆஸ்திரேலிய பயணத்தில் அதிகமான பயிற்சி ஆட்டங்கள் இருக்க வேண்டும் என்று ரவிசாஸ்திரி அப்போது கேட்டுக் கொண்டார்.

    அணி நிர்வாகத்தை பலப்படுத்துவது குறித்து நிர்வாக குழு ஆலோசித்தது. இதை தொடர்ந்து இந்திய அணிக்கு விரைவில் சுழற்பந்து பயிற்சியாளர் நியமிக்கப்படுகிறார். #INDvENG #RaviShastri
    Next Story
    ×