search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை பாந்தர்ஸ் வெற்றிக்கு அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆட்டம் காரணம் - கேப்டன் ரோகித் பாராட்டு
    X

    மதுரை பாந்தர்ஸ் வெற்றிக்கு அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆட்டம் காரணம் - கேப்டன் ரோகித் பாராட்டு

    டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றதற்கு அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோரின் ஆட்டம் முக்கிய காரணம் என்று அந்த அணியின் கேப்டன் டி.ரோகித் பாராட்டினார். #TNPL2018
    சென்னை:

    3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இறுதிப்போட்டியில் மதுரை பாந்தர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி முதல்முறையாக கோப்பையை வென்றது.

    முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 19.5 ஓவர்களில் 117 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜெகதீசன் 51 ரன்கள் (44 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டம் இழந்தனர். பின்னர் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 50 பந்துகளில் 4 பவுண்டரி, 4 சிக்சருடன் 75 ரன்னும், ஷிஜித் சந்திரன் 49 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணி வீரர் அருண் கார்த்திக் ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்றார்.

    இந்த தொடரில் நடந்த மொத்தம் 32 ஆட்டங்களில் 7,400 பந்துகள் வீசப்பட்டன. 9,769 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதில் 766 பவுண்டரிகளும், 411 சிக்சர்களும் அடங்கும். 2,728 பந்துகள் ரன் எதுவுமின்றி ‘டாட்-பால்’ ஆக அமைந்தன. 401 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. 12 ஸ்டம்பிங், 262 கேட்ச்கள் செய்யப்பட்டன. 40 அரைசதமும், ஒரு சதமும் விளாசப்பட்டன.

    அதிக பவுண்டரிகள் அடித்தவருக்கான விருதை ஜெகதீசனும் (45 பவுண்டரிகள், திண்டுக்கல் டிராகன்ஸ்), அதிக சிக்சர் மற்றும் அதிக ரன்கள் குவித்தவருக்கான விருதை அருண் கார்த்திக்கும் (23 சிக்சர்கள், 472 ரன்கள், மதுரை பாந்தர்ஸ்), அதிக ‘டாட்-பால்’ வீசியவருக்கான விருதை வருண் சக்ரவர்த்தியும் (மதுரை பாந்தர்ஸ்), அருமையான கேட்ச் பிடித்தவருக்கான விருதை ஷாருக்கானும் (கோவை கிங்ஸ்), அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவருக்கான விருதை அபிஷேக் தன்வாரும் (15 விக்கெட், மதுரை பாந்தர்ஸ்) தட்டிச் சென்றனர்.

    வெற்றிக்கு பின்னர் மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் டி.ரோகித் அளித்த பேட்டியில், ‘நம்பமுடியாத உணர்ச்சிகள் எங்களை சுற்றி உலவுகிறது. முதல் 2 ஆண்டுகளில் எந்தவித வெற்றியும் பெறாமல் துவண்டு இருந்த நாங்கள் வீறு கொண்டு எழுந்து கோப்பையை கைப்பற்றி இருப்பது சிறப்பானதாகும். அருண் கார்த்திக், ஷிஜித் சந்திரன் ஆகியோரின் ஆட்டமே எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம்’ என்று தெரிவித்தார்.

    மதுரை பாந்தர்ஸ் அணியின் பயிற்சியாளர் அருண்குமார் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. தோல்வியால் சோர்ந்து போய் இருந்த எங்கள் அணிக்கு வீரர்களின் கடின உழைப்பால் வெற்றி கிடைத்து இருக்கிறது. குறைந்த நம்பிக்கையுடன் போட்டியை தொடங்கிய நாங்கள் கோப்பையை வென்று இருப்பது பெரிய விஷயமாகும். இந்த போட்டி தொடர் எங்களுக்கு சிறப்பான பயணமாக அமைந்தது’ என்றார்.

    தொடர்நாயகன் விருது பெற்ற மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் பேசுகையில், ‘இந்த வெற்றியை அற்புதமாக உணருகிறேன். இந்த சீசனில் எங்கள் அணி வீரர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினார்கள். முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியிடம் தோல்வி கண்ட நாங்கள் இறுதிப்போட்டியில் அந்த அணியை வீழ்த்தியது மிகவும் முக்கியமானதாகும்’ என்று கூறினார்.  #TNPL2018


    Next Story
    ×