search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்கள் உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை
    X

    பெண்கள் உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை

    பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomenHockeyWorldCup #India #Ireland
    லண்டன்:

    16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த கால்இறுதிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 10-வது இடம் வகிக்கும் இந்திய அணி, 17-வது இடத்தில் உள்ள இத்தாலியை எதிர்கொண்டது.

    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 9-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. லால்ரெம்சியாமி இந்த கோலை அடித்தார். 45-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நேகா கோயல் 2-வது கோலை திணித்தார். 55-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை மற்றொரு இந்திய வீராங்கனை வந்தனா கட்டாரியா கோலாக மாற்றி அசத்தினார். பதில் கோல் திருப்ப இத்தாலி அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

    முடிவில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை விரட்டியடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. 1978-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி கால்இறுதிக்கு தகுதி பெற்று இருப்பது இதுவே முதல்முறையாகும். நடப்பு தொடரில் இந்திய அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். முன்னதாக லீக் சுற்றில் இந்திய அணி 2 டிரா, ஒரு தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, உலக தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ள அயர்லாந்துடன் மல்லுகட்டுகிறது. நல்ல பார்மில் இருக்கும் அயர்லாந்து அணி லீக் ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. அதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.  #WomenHockeyWorldCup #India #Ireland 
    Next Story
    ×