search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து
    X

    2-வது ஒருநாள் கிரிக்கெட்- இந்தியாவிற்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து

    லார்ட்ஸில் நடைபெற்று வரும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. #ENGvIND #JoeRoot
    இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் போட்டியில் விளையாடியதுபோல் இந்த போட்டியில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

    முதல் 10 ஓவரில் 69 ரன்கள் சேர்த்திருந்தது. 11-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஜேசன் ராய் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 42 பந்தில் 4 பவுண்டரி, 1 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்தார். அடுத்து பேர்ஸ்டோவ் உடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். ஜோ ரூட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விளையாடிய பேர்ஸ்டோவ் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். தொடக்க விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தின் ரன்வேட்டைக்கு தடைபோட்டார் குல்தீப் யாதவ்.

    3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். ரூட் நிதானமாக விளையாட மோர்கன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும், 51 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது இங்கிலாந்து அணி 30.3 ஓவரில் 189 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த பென் ஸ்டோக்ஸ் (5), ஜோஸ் பட்லர் (4), மொயீன் அலி (13) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.

    7-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் டேவிட் வில்லே ஜோடி சேர்ந்தார். அப்போது இங்கிலாந்து 41.4 ஓவரில் 239 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 96 பந்தில் 82 ரன்கள் எடுத்திருந்தார்.


    31 பந்தில் 51 ரன்கள் சேர்த்த டேவிட் வில்லே

    டேவிட் வில்லே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46-வது ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். இந்த ஓவரில் டேவிட் வில்லே இரண்டு பவுண்டரியுடன் ஒரு சிக்ஸ் விளாசினார். 47-வது ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார். பாண்டியா வீசிய 48-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் அடித்து லார்ட்ஸ் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட். 109 பந்தில் சதம் அடித்த ஜோ ரூட்டிற்கு இது சர்வதேச அளவில் 12-வது சதமாகும்.

    டேவிட் வில்லேயின் அதிரடியால் 48-வது ஓவரை 300 ரன்னைத் தாண்டியது. டேவிட் வில்லே கடைசி ஓவரின் 5-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து 30 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த டேவிட் வில்லே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்கள் குவித்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 323 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. ஜோ ரூட் 116 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 113 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    Next Story
    ×