search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்தில் ஜொலிக்க ஒருமாதம் தீவிர பயிற்சி மேற்கொள்கிறார் சாஹல்
    X

    இங்கிலாந்தில் ஜொலிக்க ஒருமாதம் தீவிர பயிற்சி மேற்கொள்கிறார் சாஹல்

    இங்கிலாந்து தொடரில் சிறப்பாக செயல்பட தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒருமாதம் தீவிர பயிற்சியில் ஈடுபடப்போவதாக சாஹல் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து சென்று சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை இழந்தது.

    அதன்பின் இந்திய அணியில் குல்தீப் யாதவ், சாஹல் என்ற இரண்டு ரிஸ்ட் ஸ்பின்னர்கள் இடம்பிடித்தார்கள். இருவரும் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தியதால் அஸ்வின், ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    சாஹல் 23 ஒருநாள் போட்டியில் 43 விக்கெட்டுக்களும், 21 டி20 போட்டியில் 35 விக்கெட்டுக்களும் கைப்பற்றியுள்ளார். இந்திய அணி ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அயர்லாந்து, இங்கிலாந்து சென்று விளையாடுகிறது.

    தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இந்த மாதம் 27-ந்தேதியுடன் முடிவடைகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த பின்னர் சுமார் ஒருமாதம் இடைவெளி உள்ளது. சாஹல் இங்கிலாந்து சென்று விளையாடியது கிடையாது.

    இதனால் இந்த ஒருமாதமும் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில், சாஹல் அவருடைய பயிற்சியாளராக நரேந்த்ர ஹர்மானி உடன் இணைந்து தீவிர பயிற்சியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து சாஹல் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடருக்கு முன் நாங்கள் அயர்லாந்து சென்று விளையாட இருக்கிறோம். இங்கிலாந்து சிதோஷ்ண நிலைதான் அயர்லாந்திலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடர் முடிந்த உடன் ஒருமாதம் இடைவெளி உள்ளது. அப்போது பயிற்சிக்காக தேசிய அகாடமி செல்ல இருக்கிறேன். அங்கே என்னுடைய பயிற்சியாளர் ஹிர்மானியுடன் ஆலோசனை நடத்துவேன்.

    ஹர்மானி ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளார். ஆகவே, இங்கிலாந்து குறித்த சூழ்நிலை குறித்து கேட்டு அறிந்து கொள்வேன். இந்தியா ‘ஏ’ அணி முன்னதாக அங்கு செல்கிறது. என்னுடைய ஏராளமான நண்பர்கள் அந்த அணியில் உள்ளனர். அவர்களிடம் இருந்து கேட்டறிந்து புரிந்து கொள்ள முயற்சி செய்வேன்’’ என்றார்.
    Next Story
    ×