search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காமன்வெல்த் போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய சாய்னாவின் தந்தைக்கு அனுமதி
    X

    காமன்வெல்த் போட்டிக்கான விளையாட்டு கிராமத்தில் நுழைய சாய்னாவின் தந்தைக்கு அனுமதி

    காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான கிராமத்தில் நுழைய சாய்னாவின் தந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இந்த விஷயத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கம் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கண்டது.
    கோல்டுகோஸ்ட்:

    21-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ்ட் நகரில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா அங்குள்ள காரரா ஸ்டேடியத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நடக்கிறது. இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த சுமார் 4,500 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்திய தரப்பில் 218 வீரர், வீராங்கனைகள் களம் இறங்குகிறார்கள்.



    காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியினருடன், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் தந்தை ஹர்விர் சிங், பி.வி.சிந்துவின் தாயார் விஜயா உள்பட 15 பேர் அணியின் அதிகாரிகளாக செல்ல மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி அளித்து இருந்தது. ஆனால் அவர்கள் தங்களது பயணத்துக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. அதனை ஏற்று அவர்களும் அணியினருடன் ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்.

    இந்திய அணியினருடன் சென்றுள்ள சாய்னாவின் தந்தை ஹர்விர்சிங்குக்கு அதிகாரிகளுக்குரிய அடையாள அட்டை மற்றும் வீரர்கள் தங்கும் விளையாட்டு கிராமத்திற்குள் நுழைய முதலில் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த சாய்னா நேவால் தனது ஆதங்கத்தை டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.

    அதில், ‘காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக நாங்கள் புறப்படுகையில் எனது தந்தையின் பெயர் அணியின் அதிகாரிகள் பட்டியலில் இடம் பெற்று இருந்தது. அதற்குரிய செலவு தொகையையும் வழங்கி இருந்தோம். ஆனால் விளையாட்டு கிராமத்துக்கு வந்த பிறகு அணியின் அதிகாரிகள் பட்டியலில் இருந்து எனது தந்தையின் பெயர் நீக்கம் செய்யப்பட்டது ஆச்சரியம் அளிக்கிறது. இதனால் அவர் என்னுடன் தங்க முடியாது. அவர் எனது போட்டியை பார்க்க நேரில் வர முடியாது. விளையாட்டு கிராமத்தில் கூட நுழைய முடியாது. அப்படியானால் அவர் எப்படி என்னை சந்திக்க முடியும். போட்டியின் போது எனக்கு ஆதரவாக என்னுடைய தந்தை எப்படி இருக்க முடியும். இதனை எல்லாம் என்னிடம் முன்பே தெரியப்படுத்தாதது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை’ என்று காட்டமாக கேள்வி கேட்டு இருந்தார்.

    இதையடுத்து இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் காமன்வெல்த் விளையாட்டு அமைப்பு குழு அதிகாரிகளுடன் பேசி சாய்னாவின் தந்தைக்கு அதிகாரிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுத்ததுடன், விளையாட்டு கிராமத்தில் தங்கவும் அனுமதி பெற்று கொடுத்தனர்.

    இதன் பிறகே சாய்னா நேவால் நிம்மதி அடைந்தார். தனது வேண்டுகோளை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு சாய்னா நேவால் டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்து இருக்கிறார். 
    Next Story
    ×