search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடைசி பந்தில் சிக்சர் அடித்த தினேஷ்கார்த்திக்கு மியாண்டட் பாராட்டு
    X

    கடைசி பந்தில் சிக்சர் அடித்த தினேஷ்கார்த்திக்கு மியாண்டட் பாராட்டு

    கடைசி பந்தில் சிக்சர் அடித்த மற்றொரு வீரரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ஜாவித் மியாண்டட்டும் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். #DineshKarthik #Miandad
    மும்பை:

    இலங்கையில் நடந்த 3 நாடுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக வீரர் தினேஷ்கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.

    கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை அவர் பெற்றார். தினேஷ் கார்த்திக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டினார்கள்.

    இந்த நிலையில் கடைசி பந்தில் சிக்சர் அடித்த மற்றொரு வீரரும், பாகிஸ்தான் முன்னாள் கேப்டனுமான ஜாவித் மியாண்டட்டும் தினேஷ் கார்த்திக்கை பாராட்டி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    தினேஷ்கார்த்திக் கடைசி பந்தில் சிக்சர் அடித்ததை நான் பார்க்கவில்லை. பத்திரிகைகளில் படித்து தான் தெரிந்து கொண்டேன். கடைசி பந்தில் சிக்சர் அடிக்க அதிகமான நம்பிக்கை தேவைப்படுகிறது. இது பந்துவீச்சாளர்களுக்கு பரிதாபம் என்றே கருதுகிறேன். கடைசி பந்தில் சிக்சர் அடித்த தினேஷ் கார்த்திக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    கொழும்பு ஆடுகளத்தில் பவுண்டரி தூரம் எவ்வளவு இருந்தது என்று எனக்கு தெரியாது. முன்பு சிக்சர் அடிப்பது என்பது மிகவும் கடினமாக இருந்தது. நவீன கிரிக்கெட்டில் இது சாதாரணமாகி விட்டது.

    20 ஓவர் போட்டியால் தான் இந்த மாற்றம் ஏற்பட்டது. ஏனென்றால் அந்த போட்டியில் அதிரடியாக ஆடவேண்டிய சூழ்நிலையாகும். இதனால் தற்போது ஒரு ஒவரில் 30 ரன் என்பது எடுக்க இயலும்.

    கடைசி பந்தில் நான் அடித்த சிக்சரை ரசிகர்கள் பாராட்டியது. இன்னும் எனது நினைவில் இருக்கிறது.

    இவ்வாறு மியாண்டட் கூறியுள்ளார்.

    மியாண்டட் 1986-ம் ஆண்டு சார்ஜாவில் நடந்த போட்டியில் இந்தியாவுக்கு எதிராக கடைசி பந்தில் சிக்சர் அடித்து பாகிஸ்தானை வெற்றி பெற வைத்தார். சேட்டன் சர்மா வீசிய பந்தை அவர் சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×