search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து - லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்குமா சென்னையின் எப்.சி.?
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து - லீக் சுற்றை வெற்றியுடன் முடிக்குமா சென்னையின் எப்.சி.?

    சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 88-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் மோதுகின்றன.
    சென்னை:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவுக்கு வருகிறது. இந்த போட்டியில் பெங்களூரு எப்.சி., புனே சிட்டி, சென்னையின் எப்.சி. ஆகிய 3 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்டன. அரைஇறுதி வாய்ப்பை பெறும் மற்றொரு அணி கோவாவா அல்லது ஜாம்ஷெட்பூர் அணியா? என்பது நாளை தெரிய வரும். டெல்லியில் நேற்றிரவு நடந்த டெல்லி டைனமோஸ்-புனே சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு நடைபெறும் 88-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி அணிகள் மல்லுகட்டுகின்றன. இவ்விரு அணிகளுக்கும் இது தான் கடைசி லீக் போட்டியாகும். புள்ளி பட்டியலில் 29 புள்ளிகளுடன் (8 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி) 3-வது இடத்தில் உள்ள சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால், புனே சிட்டியை (30 புள்ளி) பின்னுக்கு தள்ளிவிட்டு 2-வது இடத்துக்கு முன்னேறி விடலாம். அதே சமயம் அரைஇறுதி வாய்ப்பை இழந்து விட்ட மும்பை அணி (23 புள்ளி) ஆறுதல் வெற்றி பெறுவதில் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.

    சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரி கூறுகையில் ‘இந்த ஆட்டத்தில் நான் ஒன்றிரண்டு மாற்றங்களை செய்வேன். வெளியில் இருக்கும் சில வீரர்களுக்கு விளையாட வாய்ப்பு அளிப்பேன். அவர்கள் சிறப்பாக ஆடினால் தொடர்ந்து ஆடும் அணியில் இடம் பிடிப்பார்கள். எப்பொழுதும் அடுத்த ஆட்டத்துக்கான வீரர்களை தேர்வு செய்வதில் தலைவலி இருக்க தான் செய்கிறது. அரைஇறுதியில் எந்த அணியை சந்திக்க இருக்கிறோம் என்பது குறித்து எனக்கு கவலையில்லை. மும்பைக்கு எதிரான ஆட்டம் முடிந்த பிறகே அது குறித்து சிந்திப்போம். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என நம்புகிறேன்’ என்றார்.

    Next Story
    ×