search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறது விதர்பா; 3-வது நாளில் 528/7
    X

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டி: சாம்பியன் பட்டத்தை நெருங்குகிறது விதர்பா; 3-வது நாளில் 528/7

    ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் 3-வது நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 528 ரன்கள் குவித்துள்ள விதர்பா சாம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ளது. #RanjiTrophyFinal
    இந்தியாவின் முதல்தர கிரிக்கெட் தொடரான ரஞ்சி டிராபியின் 2017-18 சீசனின் இறுதிப் போட்டி இந்தூரில் நேற்றுமுன்தினம் (29.12.2017) தொடங்கியது. இதில் டெல்லி - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற விதர்பா அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஹிமாத் சிங் 66 ரன்களும், த்ருவ் ஷோரே அபாரமாக விளையாடி சதமும் (145) அடிக்க டெல்லி அணி முதல் இன்னிங்சில் 102.5 ஓவரில் 295 சேர்த்து ஆல்அவுட் ஆனது. விதர்பா அணி சார்பில் ஹாட்ரிக் விக்கெட் உடன் குர்பானி 6 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விதர்பா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. பைஸ் பாசல், சஞ்சய் ராமசாமி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். அணியின் ஸ்கோர் 96 ரன்னாக இருக்கும்போது சஞ்சய் ராமசாமி ஆட்டம் இழந்தார். மறுமுனையில் விளையாடிய பைஸ் பாசல் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 3-வது வீரராக களம் இறங்கிய வாசிம் ஜாபர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்து வந்த கணேஷ் சதிஷ், வாங்கடே முறையே 12 மற்றும் 28 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

    வாசிம் ஜாபர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரது அரைசதத்தால் விதர்பா அணி நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்தது. வாசிம் ஜாபர் 61 ரன்களுடனும், அக்சேய் வாகர் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. 89 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் விதர்பா பேட்டிங்கை தொடர்ந்தது. அக்சேய் வாகர் 17 ரன்கள் எடுத்த நிலையிலும், வாசிம் ஜாபர் 78 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். இதனால் விதர்பா அணி 246 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது. விதர்பாவை 300 ரன்னுக்குள் சுருட்டு விடலாம் என டெல்லி நினைத்தது.

    இந்நிலையில்தான் 7-வது விக்கெட்டுக்கு இணைந்த அக்சய் வாத்கர்- ஆதித்யா சர்வாத் ஜோடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால் விதர்பா அணி முன்னிலைப் பெற்றது. வாத்கர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சர்வாத் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7-வது விக்கெட்டுக்கு 169 ரன்கள் குவித்தது.



    அடுத்து வந்த சித்தேஷ் நேரலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் விதர்பாவின் ஸ்கோர் 500 ரன்னைத் தாண்டியது. இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் விதர்பா 7 விக்கெட் இழப்பிற்கு 528 ரன்கள் குவித்துள்ளது. வாத்கர் 133 ரன்னுடனும், ஆதித்யா நேரல் 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    தற்போது வரை விதர்பா அணி 233 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. கைவசம் 3 விக்கெட்டுக்கள் உள்ளன. நாளைய 4-வது நாள் ஆட்டத்தில் 250 ரன்கள் முன்னிலையில் உள்ள நிலையில் விதர்பா ஆல்அவுட் ஆனாலும், பின்னர் டெல்லி அணி 2-வது இன்னிங்சில் இந்த 250 ரன்களையும் தாண்டி விதர்பா அணிக்கு இலக்கு நிர்ணயிக்குமா? என்பது சந்தேகம்தான்.

    ஒருவேளை போட்டி டிரா ஆனாலும் முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற்றுள்ளதால் விதர்பா வெற்றி பெற்றுவிடும். இதனால் முதன்முறையாக ரஞ்சி டிராபி சாம்பியன் கோப்பையை வெல்ல விதர்பா நெருங்கி வந்துள்ளது.
    Next Story
    ×