search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் ரூ.500 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவு
    X

    பெங்களூருவில் ரூ.500 கோடியுடன் நகைக்கடை அதிபர் தலைமறைவு

    பெங்களூருவில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணம் ரூ.500 கோடியுடன் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவாகி விட்டார். இதனால் நகைக்கடையை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    பெங்களூரு:

    பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.

    இந்த நகைக்கடையில் சொந்தமாக தங்க நகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர மன்சூர்கான் நடத்தி வரும் நகைக்கடையில் பணம் முதலீடு செய்யும் நபர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்றும், வாடிக்கையாளர்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு வட்டியுடன் சேர்த்து தங்க நகைகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் மன்சூர்கான் நடத்தி வரும் நகைக் கடையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தனர்.

    பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தங்களது மகளின் திருமணத்திற்கு தங்க நகைகள் வாங்கி கொள்ளலாம் என நினைத்து பணம் முதலீடு செய்திருந்தனர். குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகஅளவில் முதலீடு செய்திருந்ததாக தெரிகிறது. கடந்த 5-ந் தேதி ரம்ஜான் பண்டிகைக்கும் மன்சூர்கானின் நகைக்கடை திறக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு, கடந்த 4 நாட்கள் கடை திறக்கப்படவில்லை. நேற்று காலையிலும் கடை திறக்காமல் பூட்டியே கிடந்தது.

    இதற்கிடையில், நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கான் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ததில் ரூ.400 கோடி சிவாஜிநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க்கிடம் கொடுத்திருந்தேன். தற்போது அந்த பணத்தை அவர் கொடுக்க மறுக்கிறார். ரூ.400 கோடியை திரும்ப கொடுக்கும்படி கேட்டால், ரவுடிகள் மூலம் மிரட்டல் விடுக்கிறார். எனக்கும், குடும்பத்திற்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதுபோல, அரசு அதிகாரிகள் சிலருக்கும் பணம் கொடுத்துள்ளேன்.

    நகைக்கடை அதிபர் மீது புகார் கொடுக்க குவிந்த வாடிக்கையாளர்கள்.

    இதனால் வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. அதனால் தற்கொலை செய்கிறேன், என்று அந்த ஆடியோவில் கூறப்பட்டு இருந்தது. அந்த ஆடியோவை மன்சூர்கான் போலீசார் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பியதும், அது தான் தற்போது வெளியாகி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த ஆடியோ வெளியான பின்பு வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டு உரிமையாளர் மன்சூர்கான் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, சிவாஜிநகரில் உள்ள நகைக்கடை முன்பு, அங்கு முதலீடு செய்திருந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கடையை திறக்கும்படியும், மன்சூர்கான் உடனடியாக கடைக்கு வர வேண்டும் என்றும், தாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என்று கோரியும் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்ததும் கமர்சியல்தெரு போலீசார் மற்றும் கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் புகார் அளிக்கும்படி கேட்டுக் கொண்டனர். ஆனால் மன்சூர்கானை அழைத்து வரும்படி கூறி வாடிக்கையாளர்கள் கோஷங்களை எழுப்பினார்கள். அதே நேரத்தில் போலீசில் புகார் அளிக்க எந்த வாடிக்கையாளர்களும் முன்வராமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் வாடிக்கையாளர்கள் கூறிய தகவல்படி மன்சூர்கான் தனது கடையில் வாடிக்கையாளர்கள் முதலீடு செய்திருந்த பணம் ரூ.500 கோடி வரை மோசடி செய்திருக்கலாம் என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் முதலில் புகார் அளிக்காமல் இருந்த வாடிக்கையாளர்கள் கமர்சியல்தெரு போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க தொடங்கினார்கள். அதுபோல, மன்சூர்கான் நகைக்கடை முன்பு திரண்டு இருந்தவர்களிடம் இருந்தும் புகார்கள் பெறப்பட்டது.

    நகைக்கடை அதிபர் மன்சூர்கானுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நேற்று போலீசில் புகார் அளித்தனர். குவிந்து கிடக்கும் புகார் மனுக்களை படத்தில் காணலாம்.

    அதன்பிறகு, சிவாஜிநகரில் உள்ள மண்டபத்திற்கு வாடிக்கையாளர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு மொத்தமாக புகார்கள் பெறப்பட்டன. ஒட்டு மொத்தமாக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இந்த மோசடி பற்றி புகார் அளித்திருந்தனர். வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரில் கமர்சியல்தெரு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர். வாடிக்கையாளர்கள் செய்த முதலீடு பணத்தை பெற்றுக் கொடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் ராகுல்குமாரும் உறுதி அளித்தார்.

    இந்த நிலையில், நகைக்கடை உரிமையாளர் மன்சூர்கான் குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பாகவே அவர் குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் எங்கு இருக்கிறார்? வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டாரா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து கமர்சியல்தெரு போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் மன்சூர்கானை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் மன்சூர்கானை தேடப்படும் நபராகவும் போலீசார் அறிவித்துள்ளனர்.

    இதற்கிடையில், மன்சூர்கானின் குற்றச்சாட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் மறுத்துள்ளார். மன்சூர்கானிடம் இருந்து ரூ.400 கோடி வாங்கவில்லை என்றும், இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் வாடிக்கையாளர்களிடம் வசூலித்த பணம் ரூ.500 கோடியுடன் நகைக்கடை உரிமையாளர் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
    Next Story
    ×