search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு
    X

    அமித்ஷாவுடன் தமிழக கவர்னர் சந்திப்பு

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லி சென்ற தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
    புதுடெல்லி:

    சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், பாரதீய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக கூறினார். இது பாரதீய ஜனதா கட்சியினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே, அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை கூடாது என்றும், அதிகாரமிக்க ஒற்றை தலைமை வேண்டும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறி இருப்பது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதுதவிர, ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

    இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

    அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

    இதேபோல் மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, அருணாசலபிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா ஆகியோரும் அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

    மாநில கவர்னர்கள் உள்துறை மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமித்ஷாவை சந்தித்து பேசிய பின் நிருபர்களிடம் பேசிய மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, மாநிலத்தில் நிலவும் சூழ்நிலைகள் குறித்து உள்துறை மந்திரியிடம் விளக்கி கூறியதாக தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு, சந்திப்பின் போது அதுபோன்று எதுவும் பேசவில்லை என்று பதில் அளித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு மேற்கு வங்காளத்தில் அரசியல் மோதல்கள் நடந்து வருவது குறித்தும், இதில் சிலர் கொல்லப்பட்டு இருப்பது பற்றியும் மிகுந்த கவலை தெரிவித்த உள்துறை அமைச்சகம், சட்டம்-ஒழுங்கை பராமரிக்குமாறு மாநில அரசை கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    இதேபோல் புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமியும் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
    Next Story
    ×