search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொகுதியில் கவனம் செலுத்துங்கள் - கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்
    X

    தொகுதியில் கவனம் செலுத்துங்கள் - கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற கார்த்தி சிதம்பரத்துக்கு, தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
    புதுடெல்லி:

    ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடு முதலீடுகளைப் பெறுவதற்காக அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக, சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. 
     
    ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி உதவி செய்ததாகவும், இதற்காக கார்த்தி பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சொந்த அலுவல் காரணமாக இந்த மாதம் வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவிருப்பதால் அனுமதி அளிக்கும்படி கூறியிருந்தார். 



    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோர் கொண்ட அமர்வு, நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் வைப்பு நிதி செலுத்திவிட்டு, அவர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என அனுமதி அளித்தது. மேலும், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகளை ஏற்கவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

    இதற்கிடையே, தான் ஏற்கனவே நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்திய பிணைத்தொகை 10 கோடி ரூபாயை திரும்ப தரவேண்டும் எனக்கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதியில் கவனம் செலுத்துங்கள் என கார்த்தி சிதம்பரத்துக்கு அறிவுரை வழங்கியதுடன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    Next Story
    ×