search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திர சட்டசபை தேர்தல்- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு
    X

    ஆந்திர சட்டசபை தேர்தல்- ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு

    ஆந்திராவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. இந்த 4 மாநில சட்டசபை தேர்தல்களில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நடத்தப்பட்டன. நேற்று இரவு அந்த முடிவுகள் வெளியிடப்பட்டன.

    ஆந்திராவில் மொத்தம் 175 எம்.எல்.ஏ.க்களை கொண்ட சட்டசபை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 102 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்தது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 67 இடங்களை கைப்பற்றியது.

    கடந்த தேர்தலில் 1.6 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்கு வரமுடியாமல் போனது. எனவே இந்த தடவை அவர் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவான நிலை தெரிய வந்துள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. சி.பி.எஸ். என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 130 முதல் 135 இடங்கள் வரை என்று கூறப்பட்டுள்ளது.

    ஐ நியூஸ் நெட்வொர்க் நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகனுக்கு 122 இடங்கள் வரையும், சந்திரபாபு நாயுடுவுக்கு 65 இடங்கள் வரையும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

    சில கருத்து கணிப்புகளில் ஆந்திராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. லகத்பதி ராஜாகோபால் சர்வேயில் சந்திரபாபு நாயுடுவுக்கு 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டிக்கு 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    அதுபோல ஆர்.ஜி. பிளாஷ் நடத்திய கருத்து கணிப்பில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு 90 முதல் 110 இடங்கள் வரையும், ஜெகன்மோகன் ரெட்டி கட்சிக்கு 65 முதல் 79 இடங்கள் வரையும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு 130 முதல் 135 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவுக்கு 37 முதல் 40 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    பெரும்பாலான கருத்து கணிப்புகளில் சந்திரபாபு நாயுடுவுக்கு எதிரான அதிருப்தி அலை, ஊழல், ஜாதி அரசியல் போன்றவை தெலுங்கு தேசம் கட்சிக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. சந்திரபாபு நாயுடு தோல்வி அடையும் பட்சத்தில் அவரது தேசிய அரசியலிலும் கடும் பின்னடைவு ஏற்படும்.

    நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் அவரது கட்சிக்கு ஆந்திர மக்களிடையே அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் அந்த மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சி அமைத்து சாதனை படைப்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடங்கள் கிடைத்தாலும் சட்டசபை தேர்தலில் மக்கள் நவீன் பட்நாயக்கே தேர்ந்தெடுத்து இருப்பதாக கருத்து கணிப்புகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

    ஒடிசா மாநில சட்டசபையில் 147 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அங்கு தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 74 இடங்கள் வேண்டும்.

    அங்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் இந்தியா டுடே நடத்திய கருத்து கணிப்பில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி 80 முதல் 100 இடங்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒடிசாவை தலைமையிடமாகக் கொண்ட கணக் நியூஸ் நடத்திய கருத்து கணிப்பில் 85 முதல் 95 இடங்கள் நவீன் பட்நாயக்குக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


    25 முதல் 35 இடங்களில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இருக்கும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×