search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை சோதனை - நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
    X

    பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படை சோதனை - நாடு முழுவதும் 3,500 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 3,500 கோடி மதிப்புக்கு பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ.950 கோடி சிக்கியது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த மாதம் 11-ந்தேதி நடைபெற்றது. கடைசி கட்ட தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    தேர்தல் அறிவிக்கப்பட்ட கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதியில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதைத்தொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் பல இடங்களிலும் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 2-ம் கட்டமாக கடந்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின்போது, தமிழகத்தில் மட்டும் 227 கோடியே 95 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. 3,113 கிலோ தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் மதுபானங்கள், போதை பொருட்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.950 கோடியே 12 லட்சம் ஆகும்.

    3-ம் கட்ட தேர்தல் நடைபெற்ற குஜராத்தில் 552 கோடியே 72 லட்சம் பணமும், பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கு பணம் 9 லட்சத்து 53 ஆயிரம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. மதுபானங்கள் மற்றும் பிற போதை பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.525 கோடி ஆகும்.

    இதற்கு அடுத்தபடியாக தலைநகர் டெல்லியில் ரூ.426 கோடி மதிப்பிலும், பஞ்சாபில் ரூ.284 கோடி மதிப்பிலும், ஆந்திராவில் ரூ.229 கோடி மதிப்பிலும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    நாடு முழுவதும் மொத்தம் 839 கோடியே 26 லட்சம் ரொக்கப்பணமும், ரூ.293 கோடியே 60 லட்சம் மதிப்புக்கு மதுபானங்கள், ரூ.1,269 கோடியே 63 லட்சம் மதிப்புக்கு போதை பொருட்கள், ரூ.986 கோடியே 73 லட்சம் மதிப்புக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள், ரூ.58 கோடியே 53 லட்சம் மதிப்புக்கு வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றியதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது.

    நாடு முழுவதும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.3 ஆயிரத்து 447 கோடியே 74 லட்சம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்களில் குறிப்பிட்ட அளவு, சம்பந்தப்பட்டவர்களால் உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டு திரும்ப பெறப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×