search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி
    X

    மதுரை பாராளுமன்ற தொகுதி தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

    அதில், ‘மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டு போடவேண்டும் என்று வாக்காளர் களுக்கு அளவுக்கு அதிகமாக பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதேபோல பிற வேட்பாளர்களும் பணப்பட்டுவாடா செய்கின்றனர். இதனால், இந்த தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் மதுரை தொகுதியில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை ரத்துசெய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த மாதம் 15-ந்தேதி இந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக மனுதாரர் கே.கே.ரமேஷ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார்.

    விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், தேர்தல் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதால் இதில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட முகாந்திரம் இல்லை என்றும் மனுதாரர் வேண்டுமென்றால் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகி தேர்தல் வழக்காக அங்கு தாக்கல் செய்யலாம் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×