search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் - போயிங் நிறுவனம் முறைப்படி ஒப்படைத்தது
    X

    இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ஹெலிகாப்டர் - போயிங் நிறுவனம் முறைப்படி ஒப்படைத்தது

    அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி இந்திய விமானப்படைக்கு நவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் ஒப்படைத்தது.
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவை நவீனப்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக விமானப்படைக்கு நவீன ஹெலிகாப்டர்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்கா மற்றும் அந்த நாட்டு விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்குடன் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    பல்லாயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்கள் தயாரித்து வழங்க போயிங் முன்வந்தது. இந்த ஹெலிகாப்டர்களின் முதல் தொகுப்பை இந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

    அதன்படி இதில் முதல் ஹெலிகாப்டரை போயிங் நிறுவனம் தற்போது இந்திய விமானப்படைக்கு வழங்கி உள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்துக்கு உட்பட்ட மேசா பகுதியில் அமைந்திருக்கும் போயிங் விமான உற்பத்திப்பிரிவில் வைத்து முறைப்படி இந்த தாக்குதல் ஹெலிகாப்டர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஏ.எச்-64 இ (1) என்ற ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டரை ஏர் மார்ஷல் புடோலா தலைமையிலான இந்திய விமானப்படை குழுவினர் பெற்றுக் கொண்டனர். அப்போது போயிங் நிறுவன பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.

    இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காக தேர்வு செய்யப்பட்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு அலபாமாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயிற்சியும் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர்தான் இந்திய விமானப்படையிலும் மேற்படி ஹெலிகாப்டர்களை இயக்குவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்திய விமானப்படைக்கான எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ள இந்த ஹெலிகாப்டர்களில் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. பன்னோக்கு ரகத்தை சேர்ந்த இந்த அப்பாச்சி கார்டியன் ஹெலிகாப்டர்கள் மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தரை இலக்குகளின் அச்சுறுத்தல் மிகுந்த பகுதிகளில் போர் புரிய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த தாக்குதல் நடவடிக்கைகளுக்கு இந்த ஹெலிகாப்டர்கள் உதவியாக இருப்பதுடன், தரைப்படையினருக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் அவர்கள் கூறினர். இந்த அப்பாச்சி கார்டியன் ரக ஹெலிகாப்டர்களால் விமானப்படையின் ஹெலிகாப்டர் பிரிவு மேலும் வலுவடையும் என அவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டனர்.
    Next Story
    ×