search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக சி.பி.ஐ. சம்மதம்
    X

    கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக சி.பி.ஐ. சம்மதம்

    கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அரசுதரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று சி.பி.ஐ. இன்று தெரிவித்துள்ளது. #CBInoobjection #IndraniMukerjea #INXmedia #KartiChidambaram
    புதுடெல்லி:

    மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ஐஎன்எக்ஸ் மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றது.

    மேற்படி பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பதற்கான தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக மத்திய முன்னாள் நிதி மந்திரியான தனது தந்தை ப.சிதம்பரத்தின் அதிகாரத்தை கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்திஉதவி செய்ததாக குற்றச்சாட்டு  எழுந்தது.

    இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். கார்த்தி சிதம்பரத்தின் மீது 5 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்தனர்.

    இந்த விவகாரத்தில் கருப்புப் பணப் பரிமாற்றம் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக ஒரு வழக்கை பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்விரு வழக்குகளின் விசாரணையும் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.



    இதற்கிடையில், ஷீனா போரா கொலை வழக்கில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அரசுதரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக முன்னர் மனு செய்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது  இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனை ஏதுமில்லை என சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மறுவிசாரணையை வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். #CBInoobjection #IndraniMukerjea #INXmedia #KartiChidambaram
    Next Story
    ×