search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி
    X

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் தள்ளுபடி

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என அவரது முன்னாள் உதவியாளர் அளித்த புகாரை விசாரணை குழு தள்ளுபடி செய்தது. #RanjanGogoi #SC
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் மீது சமீபத்தில் அவரது முன்னாள் பெண் உதவியாளர் பாலியல் புகார் தெரிவித்தார். இந்த புகாரை அவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அனைவருக்கும் அனுப்பி இருந்தார்.

    இந்த பாலியல் குற்றச்சாட்டை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மறுத்தார். அதோடு இதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதையடுத்து 3 நீதிபதிகள் கொண்ட விசாரணைக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    பாப்டே தலைமையிலான இந்த நீதிபதிகள் குழு கடந்த மாதம் 26-ந்தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது. அப்போது இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாலியல் புகார் அளித்த பெண் மற்றும் சுப்ரீம் கோர்ட் வக்கீல் ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    அதை ஏற்று பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்திருந்த பெண் ஊழியர் மூன்று நாட்கள் விசாரணைக்கு ஆஜரானார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    ’இந்த வழக்கில் எனக்கு ஆஜராகி வாதாட விரிந்தா குரோவர் என்ற வக்கீலை நியமித்து இருந்தேன். ஆனால் வக்கீல் எனக்கு உரிய உதவிகள் எதுவும் செய்யவில்லை. இதனால் தாமதம் ஏற்படுகிறது.

    நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் என் மீதான விசாரணையில் பாரபட்சம் காட்டுகிறார்கள். பாலியல் புகாரை தாமதமாக கொடுத்தது ஏன்? என்பது பற்றி மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். எனக்கு இதுவரை வழக்கு விசாரணை தகவல்கள் எதுவும் தரப்படவில்லை.

    எனது கோரிக்கைகளை 3 நீதிபதிகளும் ஏற்க மறுக்கிறார்கள். எனவே இந்த நீதிபதிகளிடம் எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை வரவில்லை. எனவே இனி நான் இந்த விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இதனால் தலைமை நீதிபதி மீது முன்னாள் பெண் ஊழியர் கூறிய பாலியல் புகார் வழக்கில் தேக்கநிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என விசாரணை குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்ததன் மூலம் அந்தப் பெண்ணின் புகாரை தள்ளுபடி செய்துள்ளது.



    இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டின் செயலாளர் அலுவலகம் மேலிடத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இவ்விவகாரத்தில் நடைபெற்ற விசாரணை விபரங்களை பொதுவெளியில் வெளியிட இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேவேளையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் நன்மதிப்புக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதன் பின்னணியில் உள்ள சதி தொடர்பாக விசாரிக்கக் கோரி வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த பொதுநல வழக்கின் மீது விசாரணை நடத்தவும் நீதிபதிகள் பாப்டே, நசீர் ஆகியோரை கொண்ட அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த வழக்கை வரும் 8-ம் தேதியன்று விசாரிக்க வேண்டும் என்ற வழக்கறிஞர் எம்.எல்.சர்மாவின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், முறைப்படி உரிய நேரத்தில் விசாரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளனர். #RanjanGogoi #SC
    Next Story
    ×