search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயாவதி-அகிலேஷ் யாதவ் மோடிக்கு பயப்படுகிறார்கள்- ராகுல்காந்தி தாக்கு
    X

    மாயாவதி-அகிலேஷ் யாதவ் மோடிக்கு பயப்படுகிறார்கள்- ராகுல்காந்தி தாக்கு

    சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பயப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #mayawati #akhilesh

    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி - சமாஜ்வாடி கட்சி ஆகியவை தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

    இந்த கட்சிகள் காங்கிரசை தங்கள் கூட்டணியில் சேர்க்க மறுத்துவிட்டன. இதனால் காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. ஆனாலும் தேர்தலுக்கு பின்னர் இழுபறி நிலை ஏற்பட்டால் இந்த கட்சிகள் காங்கிரசுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    இதனால் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இந்த கட்சிகளை விமர்சனம் செய்வதை தவிர்த்து வந்தார்.

    இந்த நிலையில் முதன் முதலாக அவர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கட்சிகளை அவர் கடுமையாக தாக்கி உள்ளார்.

    உத்தரபிரதேச மாநிலம் படாம் என்ற இடத்தில் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டார். இது சமாஜ்வாடி கட்சி வலுவாக உள்ள இடம் ஆகும். அங்கு பேசிய அவர் இரு கட்சிகளையும் விமர்சித்தார்.

    உத்தரபிரதேச மாநிலத்தை பாரதீய ஜனதாவோடு சேர்ந்து சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகளும் நாசமாக்கிவிட்டன. இங்கு மறுபடியும் காங்கிரசை வலுவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் பிரியங்காவையும், ஜோதிர் ஆதித்யா சிந்தியாவையும் பொறுப்பாளர்களாக காங்கிரஸ் நியமித்து உள்ளது.

    2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். இதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறோம். அடுத்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் இங்கு ஆட்சி அமைக்கும்.

    அகிலேஷ் யாதவும், மாயாவதியும் மோடியை பார்த்து பயப்படுகிறார்கள். கடந்த கால வரலாறுகளை புரட்டி பார்த்தால் இது நன்றாக தெரியும். சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அவர்கள் அச்சப்படுகிறார்கள்.


    ஆனால் நாங்கள் மோடிக்கு பயப்படுபவர்கள் அல்ல. எங்களையும் சி.பி.ஐ.யை காட்டி மிரட்டுகிறார்கள். அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. மோடி தன்னை காவலாளி என்று அழைத்துக் கொள்கிறார். ஆனால் அவர் திருடர் என்று நான் சொல்கிறேன்.

    இதே வார்த்தையை சொல்லும் தைரியம் அகிலேஷ் யாதவுக்கோ, மாயாவதிக்கோ இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராகுல்காந்தி இவ்வாறு விமர்சித்து இருப்பது பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. #rahulgandhi #mayawati #akhilesh

    Next Story
    ×