search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    தஷ்வந்த் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தின் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #SC #Daswanth
    புதுடெல்லி:

    சென்னை போரூரை சேர்ந்த ஹாசினி என்ற 7 வயது சிறுமி 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் மென்பொறியாளர் தஷ்வந்த் என்பவரை மாங்காடு போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். ஆனால் 3 மாதங்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

    இதற்கிடையே தஷ்வந்த் தனது தாயார் சரளாவை கொலை செய்து விட்டு நகைகளுடன் தலைமறைவானார். பின்னர் அவர் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கு செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்தது.

    இந்த வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தூக்கு தண்டனையை எதிர்த்து தஷ்வந்த் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. ஐகோர்ட்டு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து தூக்கு தண்டனையை கடந்த ஜூலை 11-ந்தேதி உறுதி செய்தது.

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு இன்று உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    இந்த வழக்கு முடியும் வரை தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்றும், ஒரு வேளை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மனுவை விசாரணைக்கு ஏற்று இருக்க மாட்டோம் என்றும், மரண தண்டனை விதிக்கப்பட்டதால் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. #SC #Daswanth
    Next Story
    ×