search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் ‘கியாஸ்’ மானியம் ரத்து- மத்திய அரசு பரிசீலனை
    X

    ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் ‘கியாஸ்’ மானியம் ரத்து- மத்திய அரசு பரிசீலனை

    சொந்த கார் வைத்திருப்பவர்கள், ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் ‘கியாஸ்’ மானியம் ரத்து செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. #CentralGovernment #gascylinder

    புதுடெல்லி:

    சமையல் கியாஸ், மண்எண்ணை போன்ற பெட்ரோலிய பொருட்களை மத்திய அரசு பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. இதன்படி மத்திய அரசு ரூ.37 ஆயிரம் கோடியை மானியத்துக்காக ஒதுக்குகிறது. இவ்வாறு அதிக தொகை ஒதுக்குவதால் மத்திய அரசுக்கு கடும் நிதி சுமை ஏற்படுகிறது. இதை தடுக்க தேவையான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

    மொத்த மானியத்தில் சமையல் கியாசுக்கு மட்டுமே ரூ.31 ஆயிரத்து 169 கோடி தேவைப்படுகிறது. எனவே இந்த வகை மானியத்தை பெருமளவு குறைக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இது சம்பந்தமாக மத்திய நிதித்துறையும், பெட்ரோலிய துறையும் ஆலோசித்து வருகின்றன.

    சமையல் கியாஸ் மானியம் வழங்குவதில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதை மேலும் அதிகப்படுத்த உள்ளனர்.

    இதற்கு முன்பு ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்யப்பட்டது. இதன் உச்சவரம்பை ரூ.5 லட்சமாக குறைக்க பரிசீலித்து வருகின்றனர்.


    மேலும் சொந்தமாக கார் வைத்து இருந்தாலும் மானியம் ரத்து செய்யப்பட உள்ளது. இதற்காக வாகன பதிவு அலுவலகங்களில் இருந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் சிலிண்டர் எண்ணிக்கையும் குறைக்க உள்ளனர். தற்போது ஆண்டொன்றுக்கு 12 சிலிண்டர் வழங்கப்படுகிறது. அதை 7 அல்லது 8 சிலிண்டராக குறைக்க திட்டமிட்டு உள்ளனர். தேர்தல் முடிந்து புதிய அரசு வந்ததும் இது நடைமுறைக்கு வரும் என்று பெட்ரோலியத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களுக்கு வழங்கும் மொத்த மானியம் ரூ.37 ஆயிரம் கோடியில் சமையல் கியாசுக்கு மட்டுமே ரூ.31 ஆயிரத்து 169 கோடியாக உள்ளது. மண்எண்ணைக்கு ரூ.5 ஆயிரத்து 853 கோடி மானியம் வழங்குகிறது.

    சமையல் கியாஸ் மானியம் 2015-16 நிதி ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடியாகும், 2016-17-ல் ரூ.12 ஆயிரம் கோடியாகவும் 2017-18-ல் ரூ.20 ஆயிரம் கோடியாகவும் இருந்தது. அது இப்போது கணிசமாக உயர்ந்து விட்டது.

    பிரதமர் கொண்டு வந்த ஏழைகளுக்கு கியாஸ் திட்டம் மூலம் சிலிண்டர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதே இதற்கு காரணமாகும்.

    2015-ல் 14 கோடியே 80 லட்சம் சமையல் கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டு இருந்தன. தற்போது 26 கோடியே 60 லட்சம் இணைப்புகளாக உயர்ந்துள்ளது.

    பிரதமரின் சமையல் கியாஸ் திட்டத்துக்கு மட்டுமே புதிதாக 7 கோடியே 10 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    ஒரு சிலிண்டருக்கு ரூ.160-ல் இருந்து ரு.250 வரை மானியம் வழங்கப்படுகிறது. இதனால் தான் மத்திய அரசின் மானியத் தொகை அதிகரித்தப்படி உள்ளது. #CentralGovernment #gascylinder 

    Next Story
    ×