search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அயோத்தி நிலப்பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
    X

    அயோத்தி நிலப்பிரச்சினையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

    அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் தீர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு, மத்தியஸ்தர் குழுவையும் நியமித்துள்ளது. #AyodhyaCase #SC
    புதுடெல்லி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் ராமஜென்ம பூமி, பாபர் மசூதி நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் இன்னும் விடை கிடைக்கவில்லை. இவ்வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் பிரித்துக்கொள்ள வேண்டும் என கூறியிருந்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது. பின்னர் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வின் முன் நிலுவையில் உள்ளன.

    இந்த நிலையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண வழி உண்டா என்ற கேள்வியை சுப்ரீம் கோர்ட் எழுப்பியது. இதை நிர்மோகி அகாரா தவிர்த்த பிற இந்து அமைப்புகள் எதிர்த்தன. முஸ்லிம் அமைப்புகள் ஏற்றுக்கொண்டன. அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் கருத்துக்களை கேட்டபின், மத்தியஸ்தரை நியமிப்பது தொடர்பான உத்தரவை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அதில், அயோத்தி நிலம் தொடர்பான பிரச்சனையை மத்தியஸ்தர் மூலம் பேசித் தீர்க்கும்படி உத்தரவிட்டனர். இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கல்புல்லா தலைமையில் 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவை நியமித்தனர். இந்த மத்தியஸ்தர் குழுவில் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

    ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கல்புல்லா தலைமையிலான மத்தியஸ்தர் குழு, அயோத்தி நிலப்பிரச்சனை தொடர்பாக ஒரு வாரத்தில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும், 8 வாரங்களில் முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    ‘பைசாபாத்தில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும். நீதிமன்ற கண்காணிப்பில் பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும். பேச்சுவார்த்தை விவரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது’ என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். #AyodhyaCase #SC
    Next Story
    ×