search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாமில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
    X

    அசாமில் விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு

    அசாம் மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் சிலர் உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. #HoochTragedy #AssamHoochTragedy
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள கோலாஹாட் மாவட்டத்தில் தேயிலை தோட்டங்கள் அதிகமாக உள்ளன. இங்கு கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட் மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் பங்கேற்ற பலர், அப்பகுதியில் உள்ள வியாபாரியிடம் விஷத்தன்மை கொண்ட கள்ளச் சாராயத்தை வாங்கி குடித்துள்ளனர். 

    அந்த சாராயத்தை குடித்த சிறிது நேரத்திற்குள் சிலர் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதனால் சாராயம் குடித்த அனைவரும் கோலாஹாட் மற்றும் ஜோர்ஹாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 19 பேர் சிறிது நேரத்திற்குள் உயிரிழந்தனர். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில், மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை மாநில கலால்துறை வெளியிட்ட தகவலின்படி, கள்ளச்சாராயம் குடித்ததால் பலியானோரின் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 50 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    அசாம் மாநிலத்தையே உலுக்கி உள்ள இந்த சம்பவம் தொடர்பாக, கலால் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலால்துறையைச் சேர்ந்த 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி அப்பர் அசாம் டிவிஷனல் கமிஷனருக்கு, முதல்வர் சர்பானந்த சோனோவால் உத்தரவிட்டுள்ளார். #HoochTragedy  #AssamHoochTragedy
    Next Story
    ×