search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக - காங்கிரஸ் கூட்டணி: ராகுல்காந்தி, கனிமொழி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை
    X

    திமுக - காங்கிரஸ் கூட்டணி: ராகுல்காந்தி, கனிமொழி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் ராகுல்காந்தி, கனிமொழி டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர். #ParliamentElection #DMK #Congress
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை தமிழகத்தில் தி.மு.க.வுடன் இணைந்து காங்கிரஸ் சந்திக்க உள்ளது. தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.



    இந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு வழங்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகள் என்று இறுதி முடிவு எடுக்க டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கனிமொழி எம்.பி. சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து நீண்ட நேர விவாதம் நடந்தது. அப்போது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கிய, தொகுதி பங்கீடு, தொகுதிகள் குறித்த செயல் திட்டம் பற்றி கனிமொழி விளக்கி கூறினார்.

    இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. தி.மு.க. 25 இடங்களில் போட்டியிட உள்ளது. மீதம் உள்ள 15 இடங்களில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு 8 இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகள் வரை பெறுவதிலேயே குறியாக இருந்தது. தற்போது காங்கிரஸ் தாங்கள் கேட்ட தொகுதிகளில் இருந்து இறங்கி வந்துள்ளது. ஆனாலும் இரட்டை இலக்க தொகுதிகளை பெறுவதில் தான் ஆர்வம் காட்டி வருகிறது. 10-க்கு மேல் ஓரிரு இடங்களையாவது பெற வேண்டும் என்பதில் முனைப்பு காட்டுகிறது.

    ராகுல்காந்தி-கனிமொழி சந்திப்பில் தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து மட்டும் பேசப்பட்டது. மற்ற கூட்டணி கட்சிகளின் இடங்கள் குறித்து பேசப்படவில்லை.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கனிமொழி மீண்டும் ராகுல்காந்தியை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் போது, தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கான தொகுதிகள், இடங்கள் உறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதைத்தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் தொகுதிகள் உறுதி செய்யப்பட இருக்கிறது.

    தி.மு.க-காங்கிரஸ் தொகுதி பங்கீடு உறுதியான பிறகு, டெல்லியில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் சென்னை வந்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கின்றனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. #ParliamentElection #DMK #Congress

    Next Story
    ×