search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீரிகள் மீது வெளி மாநிலங்களில் தாக்குதல் - போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    X

    காஷ்மீரிகள் மீது வெளி மாநிலங்களில் தாக்குதல் - போராட்டத்தால் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    வெளி மாநிலங்களில் இருக்கும் காஷ்மீரிகளுக்கு எதிரான மனப்போக்கு மற்றும் அவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டத்தால் காஷ்மீரில் இரண்டாவது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. #Pulwamaattack #Normallifeaffected #Kashmirbandh
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வெளி மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகள் மிரட்டப்படுவதாகவும் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் சில ஊடகங்கள் மூலம் தகவல் பரவி வருகிறது.

    குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்கி படிக்கும் காஷ்மீர் மாணவர்கள் உடனடியாக தாங்கள் தங்கியிருக்கும் வீடுகளை காலி செய்யுமாறு உரிமையாளர்களால் மிரட்டப்படுவதாக செய்திகள் வெளியாகின.

    இதுபோன்ற அசம்பாவிதங்கள் மற்ற பகுதிகளில் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அதிக அக்கறைகாட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    இந்நிலையில், காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி உமர் அப்துல்லா நேற்று மாலை டெல்லி வந்து மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். பிற மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாக ராஜ்நாத் சிங்குடன் உமர் அப்துல்லா சுமார் 30 நிமிடங்கள் ஆலோசித்தார்.

    இதற்கிடையில், வெளி மாநிலங்களில் உள்ள  காஷ்மீர் மாணவர்கள் மற்றும் வியாபாரிகளின் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று பிற்பகலில் இருந்து கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்த போராட்டத்துக்கு காஷ்மீர் பொருளாதார கூட்டமைப்பு சங்கம், காஷ்மீர் வியாபாரிகள் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் போக்குவரத்து சங்கங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

    இன்று இரண்டாவது நாளாக போராட்டம் தொடர்ந்துவரும் நிலையில் மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்கள் மூடிக்கிடக்கின்றன. பஸ், டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷாக்கள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.



    ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் சந்தையில் இன்று இருவர் கூட கடை வைக்கவில்லை. இதேபோல் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடைகள் திறக்கப்படாததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீநகரில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே, புல்வாமா தாக்குதல் எதிரொலியாக காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையில் மோதல்கள் வெடிக்காமல் இருப்பதற்காக அம்மாநிலத்தின் சில பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னும் அமலில் இருப்பதால் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்துப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். #Pulwamaattack #Normallifeaffected #Kashmirbandh 
    Next Story
    ×