search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 5 கோடி வீடுகளில் பா.ஜனதா கொடி ஏற்றும் பிரமாண்ட திட்டம்
    X

    பாராளுமன்ற தேர்தலையொட்டி 5 கோடி வீடுகளில் பா.ஜனதா கொடி ஏற்றும் பிரமாண்ட திட்டம்

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 5 கோடி வீடுகளில் பாரதீய ஜனதா கொடியை ஏற்றி வைக்கும் பிரமாண்ட திட்டத்தை அமித் ஷா தொடங்கி வைத்தார். #BJP #AmitShah #BJPCampaign
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவைக்கு ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைப்பதில் பாரதீய ஜனதா கட்சி தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

    இதற்காக பல்வேறு உத்திகளை வகுத்து செயல்படுத்தவும் தொடங்கி உள்ளது.

    அந்த வகையில் நாடு முழுவதும் 5 கோடி பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் பாரதீய ஜனதா கட்சி கொடியை ஏற்றி வைக்கும் ‘மேரா பரிவார், பஜ்பா பரிவார்’ (என் குடும்பம், பா.ஜ. குடும்பம்) என்ற பிரமாண்ட திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கட்சியின் தலைவர் அமித் ஷா, குஜராத்தில் உள்ள தனது வீட்டில் பாரதீய ஜனதா கொடியை நேற்று ஏற்றி வைத்து இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    அப்போது அவர் கூறும்போது, “பாரதீய ஜனதா கட்சியின் கொடி, வளர்ச்சி, நம்பிக்கை, தேசியவாதத்தின் அடையாளம் ஆகும். அத்துடன் மோடி காலத் தில் அது தாஜா செய்தல், சாதியம், குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டியதையும் காட்டுகிறது” என குறிப்பிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கொடியேற்றும் நிகழ்ச்சி, அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி வரை தொடர்ந்து நடைபெறும்.

    அமித் ஷாவை தொடர்ந்து பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் கட்சி கொடியை ஏற்றி, அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

    இது பற்றி பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர்களில் ஒருவர் கூறும்போது, “ஒரு வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் இந்த திட்டத்தின் மூலம் 5 கோடி வீடுகளில் கொடி ஏற்றுகிறபோது 20 கோடிப்பேரை தொடர்பு கொண்டு விட முடியும்” என குறிப்பிட்டார்.

    மேலும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு செயல்படுத்தி வருகிற ஜனதன் வங்கிக்கணக்கு, இலவச கழிவறை கட்டித்தருதல், முத்ரா கடன், இலவச சமையல் கியாஸ் இணைப்பு ஆகியவற்றின் பயனாளர்களையும் பாரதீய ஜனதா கட்சி தொடர்பு கொண்டு வருகிறது.

    கட்சியின் 11 கோடி உறுப்பினர்களில் புதிதாக சேர்ந்த 9½ கோடிப்பேர் பற்றிய தகவல்களை சோதித்து அறியும் பணியை பாரதீய ஜனதா செய்து முடித்துள்ளது.

    இது பற்றி பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “2014-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 17 கோடிக்கும் அதிகமான ஓட்டுகளை பாரதீய ஜனதா கட்சி பெற்றது. தற்போது 9½ கோடிப்பேர் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜனதன் வங்கிக்கணக்கால் 35 கோடிப்பேர் பலன் அடைந்துள்ள னர். முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 7 கோடிப்பேர் பயன் பெற்றுள்ளனர். உஜ்வாலா திட்டத்தின் கீழ் 6 கோடிக்கும் மேற்பட்ட ஏழைப்பெண்களுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுடன் இன்னும் பல்வேறு தரப்பினரையும் தொடர்பு கொண்டு சென்றடைய இலக்கு வைத்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
    Next Story
    ×