search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள மீனவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- சசி தரூர் பரிந்துரை
    X

    கேரள மீனவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்- சசி தரூர் பரிந்துரை

    கேரள மீனவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர் பரிந்துரை செய்துள்ளார். #ShashiTharoor #NobelpriceRecommendation
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த ஆகஸ்டு மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதனால் கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களும் வெள்ளக்காடானதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கும், நிவாரண முகாம்களுக்கும் இடம் பெயர்ந்தனர். இந்த கனமழை காரணமாக கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் நீர் நிலைகளில் அதிக அளவு தண்ணீர் நிரம்பி வழிந்தது.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் பணியில் கேரள மீனவர்கள் முழுவீச்சில் ஈடுபட்டனர். தங்கள் படகுகள் மூலம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட்டு, வெள்ளத்தில் தத்தளித்து வந்த மக்களை காப்பாற்றினர்.  

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு கேரள மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி சசி தரூர், நார்வே நோபல் குழுவின் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில் ‘கேரள மீனவர்கள், பெரும் சிரமத்திற்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரமாக இருக்கும் படகுகளைக் கொண்டு பல மக்களை போராடி காப்பாற்றினர். இதனால் ஏராளமான படகுகளும் சேதமடைந்தன.  

    அவர்கள் தங்கள் படகுகள் மட்டுமின்றி, மற்ற ஊர்களில் இருந்தும் படகுகள் ஏற்பாடு செய்து கடல் வழியே கொண்டு வந்து தொடர்ந்து நடக்கும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றனர். நாடெங்கிலும் உள்ள மீனவர்கள்  சமூக மற்றும் பொருளாதார ரீதியான வளர்ச்சியில் பின்தங்கியுள்ளனர். கேரள மீனவர்கள் இதில் விதிவிலக்கு அல்ல. இதற்கிடையில் வெள்ளப்பெருக்கின் போது அவர்களின் இந்த  தன்னலமற்ற சேவை சிறந்த  கடல் வீரர்கள் என்பதை தெளிவாக நிரூபிக்கின்றது.

    இதையடுத்து புகைப்படம் ஒன்றில், மீனவர் ஒருவர் வெள்ளத்தில் தத்தளித்த வயதானவரை காப்பாற்ற, சற்றும் யோசிக்காமல் தண்ணீரில் மண்டியிட்டு அவரை முதுகில் சுமந்துகொண்டு வந்து பாதுகாப்பாக தன் படகில் ஏற்றியது நெகிழச்செய்தது. இப்புகைப்படம் மீனவர்களின் தூய்மையான உள்ளத்தினை பிரதிபலிக்கிறது’ என குறிப்பிடப்பட்டிருந்தது. #ShashiTharoor #NobelpriceRecommendation

    Next Story
    ×